சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
21 Jan 2008மொக்கை

இங்கயும் டிரைலர் ஓட்டுறோம்.!

கடந்த சில நாட்களாக ஈரோட்டில் இருப்பதால், பதிவுகளுக்கான

எண்ணங்கள் ஓடி முடிந்து... வடிவமும் வார்த்தைகளும் வரும் வரை..

பதிவுலகில்...(அனேகமாக) முதல் முறையாக...எனது..வரப்போகும்

பதிவுகளின் தலைப்புகள் இப்போது..

1. ஈரோட்டு சாப்பாடு - ---------ஒரு அனுபவப்பகிர்தல்

2. கடவுள் தேவையா? இல்லையா? ------------கொஞ்சம் சூடு

3. குழப்பம் மட்டுமே நிரந்தரம்.------------------- பட்டறிவு

4, செத்தாருள் வைக்கப்படும்..! -------------------எல்லாம் புலம்பல்தான்.

5. எப்படில இருக்க?------------------------கவிதை..மாதிரி

6. தோத்து ஜெயிச்சவன்!-----------------கதை...மாதிரி


கூடிய விரைவில்....(எத்தனை டிரைலர் பாத்து ஏமாந்திருப்பீங்க?- அதான் கலர்புல்லா..)

எது எதுக்கோ காத்திருக்கீங்க..! இதுக்கு காத்திருக்க மாட்டீங்களா?

:-)
தனிப் பக்கத்தில் காண →
13 Jan 2008விமர்சனம்

இது வேறு..இதிகாசம்..



தமிழில் திரைப்படக்கலை இன்னும் அதிகப்படிகள் முன்னேறும் என்று பறைசாற்றும்வகையில், இப்போது ஆவண, குறும்படங்கள் நன்கு அமைகின்றன.அப்படி ஒரு வரிசையில் இன்று நாங்கள் பார்த்த ஒரு அற்புத ஆவணப்படம்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தலித்களுக்கு நடந்த கொடுமைகளைத்தொட்டுவிட்டு,தமிழகத்தில் மாஞ்சோலை மரணங்களைக்காட்டிவிட்டு நேரடியாக.பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய ஊர்களில் நடத்த முடியாத தேர்தல்களையும், அதன் விளைவுகளையும், முழுக்க முழுக்க உண்மைச்சம்பவத்தை , யார் மனதும் நோகாமல் நடுநிலையோடு எடுக்கப்பட்டிருக்கும் இதன் தலைப்பு...

இது வேறு...இதிகாசம்!


1996முதல் அந்த ஊருக்குள் தேர்தலே நடத்தமுடியாமல் திணறும் அரசு,
வேட்பு மனு தாக்கல் செய்வதையே ஏற்றுக்கொள்ளாத சமூகம்,
துணிந்தவர்கள் கொலைசெய்யப்பட்ட நிலை!
அந்த மக்களின் இயல்பான வாழ்க்கை அவலங்கள்!
சர்வசாதாரணமாக கொலைகளுக்கு சாட்சியாக இருக்கும் ஆலமரம்,!
ஒப்புக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தி அடுத்த நாளே அவரை ராஜினாமா செய்யச்சொல்லும் கயமைத்தனம்,
பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள்!
மாவட்ட ஆட்சியர் உதயசந்திரனின் முயற்சிகள், அதன் மூலம் நடக்கும் தேர்தல்!
வெற்றி பெறும் வேட்பாளர்கள்!
காவல்துறை துப்பாக்கிப்பாதுகாப்பு!
என்று அது தொடர்பான செய்திகளைத்தொட்டு
பல்வேறு துறை வல்லுநர்கள், இருதரப்பு மக்கள், அரசியல் வாதிகள் அனைவரது கருத்துக்களுடன் ஒருவழியாக தேர்தல் முடிந்தது என்று நினைக்கும்போது 2006ல் நக்கலமுத்தன்பட்டியில் நடந்த ஊரட்சி மன்றத்தலைவர் ஜக்கனின் கொலையைச்சொல்லி, அவரது மகளின் கண்ணீரோடு படம் நிறைவடைகிறது...THIS IS NOT END என்ற எழுத்துக்களோடு.! 

குழப்பமில்லாத நேர்த்தியான தொகுப்பு! இத்திரைப்படத்தைப்பார்த்தபின், அந்த கிராமங்களின் 10 ஆண்டுகால சரித்திரத்தை படித்த உணர்வு! பின்னணி குரலே இல்லாமல் முழுப்படத்தையும் பேட்டிகளாலேயே நிரப்பி, அந்த வித்தியாசம் தெரியாமலேயே கொண்டுசென்ற நுட்பம் என்று ஒரு நல்ல ஆய்வுப்புத்தகம் படித்த திருப்தியை அளித்தது.  

அதில் ஒரு கவிதை வருகிறது... அது.

என் தாய் கருவுற்றிருந்தபோது
தெள்ளித்தின்ற மண்ணைத்தவிர
இந்த பரந்த தேசத்தில்
எங்கள் மண் எது?

தடித்த உங்கள் இதிகாசங்களில்
எந்தப்பக்கத்தில்
எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும்
ஒளியையும் தராமல்
சூரியச் சந்திர சுழற்சிகள்
எதுவரை?


இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் திரு.ஜா.மாதவராஜ் அவர் கூறும்போது...(ஆம்..அவர் முன்னிலையில்தான் திரையிடப்பட்டது)

"1996ல் நடந்த கொலைக்குக்காரணம் ஒரு தலித் பதவிக்கு வர ஆசைப்பட்டது, 2006ல் நடந்த கொலைக்குக்காரணம் பதவிக்கு வந்த தலித் கணக்குக்கேட்டது.!

10ஆண்டுகளுக்கு முன்னால் பதவிக்கு வருவதைப்பொறுத்துக்கொள்ளாத மக்கள், இப்போது பதவிக்கு வந்தாலும் அதனைப்பயன்படுத்துவதை பொறுத்துக்கொள்ளாத நிலைக்கு வந்திருக்கிறார்கள்! இதைத்தான் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.!


சுமார் 75 மணிநேர காட்சிக்கோர்வைகளிலிருந்து 65 நிமிடப்படமாக தொகுக்கப்பட்டிருக்கிறது!

இதைப்படமாக்கும்போது பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது." என்றார்.

ஒளிப்பதிவாளர் ப்ரியா கார்த்தி ,இணை இயக்குநர் சு.காமராஜ் ஆகியோரும் வந்திருந்தார்கள்!

கடைசிச்செய்தி : இயக்குநர் ஜா.மாதவராஜின் மாமனார்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள்!
தனிப் பக்கத்தில் காண →
12 Jan 2008அனுபவம்

ஈரோட்டுப் பெண்கள்



கொஞ்ச நாளாக ஈரோடு வாசம்..

அற்புதமான ஊர் !

வியாபாரத்தை வியாபார நோக்கோடு மட்டும் அணுகாத வியாபாரிகள்!

வாடகை மட்டுமல்ல, மரியாதை கொடுத்தும் மனதுக்குள் குடியிருக்கலாம் எனும் மனிதர்கள்!

வழிசொல்வதே வாழ்வுக்கடன் என்று அழகாக வழி சொல்லும் வழிப்போக்கர்கள்

அருகில்தான் இருக்கிறது ! நடந்தே போய்விடுங்கள் எனும் ஆட்டோக்காரர்கள்!!

வரி சேமிப்பு பற்றி போட்ட நாணயம் விகடனா? என்று கேட்டு விற்கும் புத்தகப்பிரியர்கள்!

யோகாவில் வென்றுவிடலாம் என்று வாழ்வியல் சொல்லும் அற்புத மாணவிகள்!

இவர்தான் முதலாளியா? என்று வியந்தபின் வணங்கி நிற்கும், தோற்றத்தில் எளிமை பூண்ட இயல்பான ரசனைக்காரர்கள்!

ஒரு மாபெரும் துணிக்கடையின் தொழிலாளர்களை வேலை நிமித்தம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது! அதிகம் படிக்காத பெண்கள்!
ஆனால் எத்தனை தெரசாக்கள் ? எடுத்தவுடன் உண்மைசொல்லும் நம்பிக்கை!
நான் சந்தித்த நங்கைகளில் சிலரது வாழ்வுத்துளிகள், படித்தபின் தான் புரியும், இந்த கணிணிக்கு முன்னால் அமர்ந்து கலாய்த்துக்கொண்டிருக்கும் நாமெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களென்று!

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒருநாள் அம்மாவின் கையை அப்பா கோபத்தில் வெட்டிவிட்டு தற்கொலையும் செய்துகொண்டபோது அவளுக்கு வயது 5 ! ஒற்றைக்கையை இழந்துவிட்டு அம்மா பட்ட துன்பத்தை இன்றுவரை மறக்காமல் , தற்போது உடல்நலமின்றி இருக்கும் அம்மாவுக்காக திருமணமே வேண்டாமென்று புலனடக்கி வாழும் நங்கை ஒருத்தி!

கட்டிய காதல் கணவன் இதோ வெளியே சென்றுவருகிறேன் என்றுசென்றுவிட்டு உயிரற்று திரும்பி வர, இவளோ நிறைமாத கர்ப்பம்!கணவன் இறந்த மூன்றாம் நாள் ஒரு ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டு,அம்மா வீட்டோடு வந்துவிட, அந்தப்பிள்ளையை வளர்ப்பதற்காக யாருக்கும் பாரமாக இருக்கவேண்டாமென்று அண்ணன் பார்த்துவைத்த வயதான ஆளை சீர்திருத்தத்திருமணம் செய்ய , அவளது இளமை அவனை சந்தேகப்பட வைக்க, தைரியமாக பிள்ளக்காக அவனைவிட்டு வெளியே வந்து, வேலைக்கு வந்து சமூக அவமானம் வாங்கும் நங்கை
இன்னொருத்தி !

சிறுவயதிலேயே கணவனை இழந்ததால் மறுமணம் செய்து கொண்ட அம்மா, இன்னொரு மகனைப்பெற்று , அவனை மட்டும் நன்கு வளர்த்து, முதல் கணவனுக்குப் பிறந்த இவளை வேலைக்காரியாகவே மாற்றி (பெற்ற அம்மா!) இவள் பருவமடைந்தபின் தன் கணவனுக்கே தீனியாகக்கொடுக்க முயற்சிக்க, இனிமேலும் இங்கிருந்தால் ஆபத்து என்று உறவுகளிடம் தஞ்சமடைந்த அவளுக்கு இன்னும் 10 நாளில் ஒரு நல்ல மனிதனுடன் பெரியோர் பார்த்துவைத்த திருமணம்.! அதைக்கெடுக்கும் முதல் வரிசையில் இவளது ...அம்மா! அதையும் மீறி சமூகத்தில் நல்லவளாக வாழமுடியும் என்று தைரியம் கொண்ட நங்கை வேறொருத்தி!

அம்மாவின் சகோதரனே கணவனாக வாய்க்க, அற்புதமான இல்லறம் ! அதில் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள்! சந்தோஷமான வாழ்க்கையில் ஒருநாள், பல்வலியென்று மருத்துவமனை போன அவன் இறந்ததாக செய்திவர, இடிந்துபோனாள் இவள் ! வெளியுலகமே தெரியாத இவளுக்கு முதலில் வேலை எப்படி கேட்பதென்றே தெரியாது! அந்தப்பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தன்னைத்தேய்த்துக்கொள்ளும் நங்கை மற்றொருத்தி!

தந்தையை பெரியப்பா குடும்பம் கொன்றுவிட, அவர்களை பழிவாங்குவதுதான் லட்சியம் என்று மூத்த மகனை வளர்க்கும் அம்மாவின் ஆசைக்கு, அண்ணன் வாழ்வு பாழாகிவிடக்கூடாது என்று
தங்கையாக இருந்து வருந்தி, அவனுக்கு புத்தி சொல்லி, மெதுவாக அவனை திருத்தி, வடமாநில நகரத்துக்கு அம்மாவுக்கு தெரியாமல் அனுப்பி, அவனுக்கு பதிலாக, குடும்பப்பொறுப்பை எடுத்து நடத்தும் நங்கை இன்னொருத்தி!


ஒரு முக்கியத்தகவல்...
இவர்கள் அனைவரும்....அந்த நிறுவனத்தின் முதல் தர ஊழியர்களாக பட்டியலிடப்பட்டு , பதவி உயர்வு பெற்றவர்கள் ! மேலும் இவர்கள் அனைவருக்கும் தந்தை பெரியார்தான் 'கடவுள்' !!

பெண்கள் மேலிருந்த மதிப்பு மிகமிக அதிகமாக கூடிப்போயிருக்கிறது!
இவர்கள் , என்னுடன் பேசிய பிறகு பாரம் குறைந்ததாகச்சொன்னார்கள்.ஆனால் எனக்கு ஏறியது பாரமும், மதிப்பும்தான்!

-மற்றவருக்காக வாழும் ஈரோட்டு  நங்கைகளே! ..உங்களுக்கு  , இந்தப்பதிவு சமர்ப்பணம்.




தனிப் பக்கத்தில் காண →
05 Jan 2008நடப்பு

அப்படியாவது தண்டனையை.....காப்பாற்றலாம்.!

இந்தப்பதிவு போடும் எண்ணமே இல்லை! இந்த செய்தியை படிக்கும்வரை !


தர்மபுரி' வழக்கு ! மூவரின் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு-

இதைப்படிச்சவுடனேயே இன்னும் கொதிப்பு அதிகமாகுதுங்க!


1.முதலில் இந்த வழக்கு எடுத்துக்கொண்ட காலமே மிக அதிகம்.

2. குற்றவாளிகள் முழுமையாக இனம்கண்டபின்னர் உடனே தீர்ப்பு அளித்திருக்கலாம்.

3. பொது இடத்தில் நடந்த,(பலரும் பார்த்த) ஒரு நிகழ்வுக்கு இன்னும் என்ன மறு விசாரணைகள்?

4. தன்னுடைய சொந்த கட்சியில் தன் பலத்தையும் - பார்! பஸ்ஸெல்லாம் எரிச்சேன்னு சொல்லி தலைமையிடம் சீட்டு கேட்கவும் பயன்பட்ட ஒரு அடிப்படை சுயநல,
கயமை,,காட்டுமிராண்டி,பொறுக்கித்தனத்துக்கு இவ்வளவு நாளே அதிகம்.இந்த தண்டனையே கம்மி. ஆனா இதைவிட பெரிய தண்டனை இந்தியாவில் இல்லையே !

5. ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது எனும் வாதத்தை இந்த சமூகம் உடைத்து பல ஆண்டுகளாகிவிட்டது.

6. இப்போதெல்லாம். ஒரு குற்றவாளியை விடுவிக்க, ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

7.அதுனால, இடையில் ஒரு நிரபராதி மாட்டினால் கூட பரவாயில்லை. ஆயிரம் குற்றவாளிகளும் தண்டிக்கப்படணும். அப்பதான் இந்த சமூகத்தில் வாழும் தகுதியே நமக்கு வரும்.

8.தூக்குதண்டனை வேண்டாமென்று கூறும் யாருக்காவது இப்படி ஒரு சம்பவம் நடந்து அப்புறம் எதிரியை விடுவிக்க இவர்களே முயலுவார்களா? -அந்த வலி , வலித்தால் மட்டுமே புரியும் வலி.!

9.காலம் கடந்த நீதி, இப்போ மறுக்கப்பட்ட நீதி ஆகிடுமோன்னு அச்சமா இருக்கு.!

10. ஆனா, இவர்கள் விடுவிக்கப்பட்டால் , இறந்த பெண்களின் குடும்பத்தினரே முயன்று அவர்களை நடுரோட்டில் கொல்லுவார்கள். அந்த வழக்கில், கொன்றவர்கள் தூக்குதண்டனையால் சாவார்கள். (ஒரே குடும்பத்தில் இரண்டு உயிர் நஷ்டம் ! இந்த சட்ட பிறழ்வால்)

நாம் ஒன்று செய்யலாம்..தண்டனையை உறுதி செய்யச்சொல்லி உயர்நீதிமன்றம், ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்றத்துக்கு தந்தி அனுப்பலாம்.! மின்னஞ்சலாம்.!

அப்படியாவது...தண்டனையை.....காப்பாற்றலாம்.!

தனிப் பக்கத்தில் காண →
04 Jan 2008நடப்பு

தண்டனைக்கு தண்டனையா?

கொஞ்சநாளைக்கு முன்னால சவுதி அரேபியாவில் மரண தண்டனை வழங்குவதை நேரில் பார்த்து இப்படி ஒரு பதிவு போட்டிருந்தேன். எனக்கும் மனசுக்குள்ள, இப்படிப்பட்ட தண்டனைகள் தேவைதானா? ஆனா இப்படி பண்ணினாத்தானே நம்ம ஆளுக திருந்தும்னு நடுவர் இல்லாத பட்டிமன்றமெல்லாம் ஓடிக்கிட்டிருந்தது.

சாதாரணமாகவே, இரண்டுபேருக்கு இடையில் சண்டை ஏற்பட்டு ஒரு பாதிப்பில் நீதி(?)மன்றம் போனால், இரண்டு பேரும் சமாதானமாகி , வக்கீலுக்கு கொடுக்க ஒன்றுமில்லைன்னு ஒரு முடிவுக்கு(!) வரும்வரை வழக்கு நடக்கும்.

இல்லைன்னா பகைவளர்ந்து அதை அடுத்த தலைமுறை எடுத்து நடத்தும்.அப்படியும் தீர்ப்பு சாதகமா இல்லைன்னா அப்பீலேய்!

எத்தனைநாளைக்குத்தான் இப்படியோ?

ஆனா நடு ஊரில் வைத்து தலையை வெட்டும் சவுதியில் , தீர்ப்புகள் சுடச்சுட ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் கிடைச்சுடும். (அதுக்கு மக்கள் தொகை, குற்ற எண்ணிக்கைன்னு பல காரணங்கள் இருக்கும்.) ஆனா இங்க அப்படி இல்ல.! அதுனாலயே இதெல்லாம் நமத்துப்போயி, குற்றம் செய்தவுங்க மேல ஒரு பரிதாபத்தையே உருவாக்கிடுறாங்க நம்ம வாய்தா ராஜாக்கள்! (மக்கள்தொகைக்கு ஏற்றமாதிரி நீதிமன்றங்களும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஓரளவுக்கு இருந்தாலும்)
இதை ஒரு நீதிபதியே சொல்லியிருக்காரு!

சவுதி அரேபியாவில் இன்னொரு நடைமுறையும் இருக்கு! தண்டனை வழங்கப்பட்டவங்களை , பாதிக்கப்பட்டவங்க மன்னித்தால் தண்டனை ரத்தாகிவிடும்.

சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் , தண்டனை வழங்கப்பட்ட குடும்பம் மன்றாடிக்கேட்டுக்கொண்டதால், பாதிக்கப்பட்ட குடும்பம் அவரை மன்னிக்க, அவருக்கு விடுதலை கிடைத்தது.

ஆனால் இன்னொரு வழக்கு- பாதிக்கப்பட்டவர்களின் பிடிவாதத்தால் -தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எனக்கு இது நியாயமாகவே படுது!

ஏன்னா...

நீண்ட நாட்களாக இழுத்து நடந்த தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு, அந்த அப்பாவி
மாணவிகளின் மரணத்துக்கு பதிலா...மரணதண்டனை வழங்குவதோட முடிஞ்சிருக்கு!
அதுக்கு மேல்முறையீடு கேட்டவுங்க...இது முன்விரோதம் காரணமாகவோ, திட்டமிட்டோ செய்யப்படலை! அதனால் தண்டனையை குறைக்கணும்னு கேட்டாங்களாம்.!(நல்லவேளை...தீர்ப்பு மேல்கோர்ட்டில் மாற்றப்படலை)

சாதாரண குடிமகனே கேட்கிறான்.! "முன்விரோதமும் இல்லை, திட்டமிடவும் இல்லை! அப்புறம் ஏண்டா அப்பாவி புள்ளைங்கள கொன்னீங்க! ஒங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது! உங்க உயிர் மட்டும் எத்தனை கோர்ட் வேணும்னாலும் போய் காப்பாற்றப்படனும்..! ஆனா மத்தவுங்க உயிருக்கு உண்மையிலேயே உலை வைப்பீங்களா?

மரணதண்டனை தேவையா இல்லையா எனும் வாதத்தைவிட, பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பமே ஒத்துக்கொண்டால்தான் அதை அப்பீலுக்கே எடுத்துக்கொள்ளவேண்டும்.
(மிரட்டி ஒத்துக்க வைக்க வேற ஆரம்பிச்சுருவாங்களோ? அதையும் சமாளிச்சாகனும்)

இந்த தருமபுரி வழக்கு விஷயத்தில், இழந்த குடும்பத்தார் எப்போது அந்த (தண்டனை) நன்னாள் வரும்னு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கே பரிதாபம் ஏற்படும்வகையில் வழக்குகள் தள்ளிப்போவதுதான் சிரமம்.! தப்பு செய்தவர்களது குடும்பமும் தவித்துதான் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது பண்ணித்தொலைங்கப்பான்னுட்டுதான்.!

தண்டனை நிறைவேறுமா , நிறைவேறாதா என்று இரு தரப்பும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.!
இந்த தண்டனைகளுக்கும் இப்ப சோதனை ஏற்பட ஆரம்பிச்சுடுச்சு!

தண்டனைகளை நாம் தண்டிக்க ஆரம்பித்துவிட்டோமோ? அப்படி ஆரம்பித்தால் இந்தச் சமூகமே தண்டனைகளை கையில் எடுக்கும் காலம் வந்துவிடுமோ என்ற அச்சத்துடன்.......

தனிப் பக்கத்தில் காண →