சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
16 Jan 2014அனுபவம்

பொங்கல் - வாழ்த்து




ஒவ்வொரு பொங்கல் விழாவின் போதும், யாராவது பொங்கல் வாழ்த்துச் சொல்லும்போது , அதனை என்னால் வார்த்தையாக மட்டும் எண்ண இயலாது. என்னைப்பொருத்தவரையில் அது ஒரு பொருள்.

அது ஒரு அட்டை , முன்பக்கம் ஒரு அழகான படம் இருக்கும். பின்புறம், ஒரு பாதியில், யார் அனுப்பினார்களோ, அவர்களது வாழ்த்து அவர்களது கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கும். மறுபாதியில், நமது முகவரி எழுதப்பட்டிருக்கும்.

வேறொரு விதமாகவும் அது வரும். ஒரு சிறிய புத்தகம்போல மடிப்புடன் இருக்கும். முன்னட்டையிலும் பின்னட்டையிலும் படங்கள் இருக்கும். சிலவற்றில் முன்னட்டையில் மட்டும் படம் இருக்கும். உள்ளே ஒரு காகிதம் ஒட்டப்பட்டு, அதில், நமக்கான வாழ்த்து, கவிதையாகவோ, வாசகங்களாகவோ அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக்கீழே, அனுப்பியவர்களும் ஓரிரு வார்த்தைகள் எழுதியிருப்பார்கள். அந்த மொத்த வாழ்த்தும் ஒரு உறைக்குள் வைக்கப்பட்டு, முன்புறம் நமது முகவரியுடன் அனுப்பப்படும்.

பொங்கல் வாழ்த்து என்று அதற்குப் பெயர்!

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல், பொங்கல் சமயத்தில், விழாவை விட அதிகம் எதிர்பார்ப்பது அந்த அட்டைகளைத்தான். பொங்கலுக்கு ஒரு வாரம் இருக்கும்போது நம் வீட்டு முகவரிக்கு வாழ்த்துக்கள் வரத் துவங்கும். ஒவ்வொரு உறவும் தனித்தனி விதங்களில் வாழ்த்துக்களை அனுப்புவார்கள். அதில் பொதுவாக ஒரு கடவுள் படம் இருக்கும். அதிலும், பிள்ளையார், முருகன், ஏழுமலையான், மஹாலெட்சுமி, ஆகியோர்தான் அதிகமாக வருவார்கள். அல்லது இரண்டு கரும்பு, மஞ்சள் கொத்து, ஓவியம் தீட்டப்பட்ட பானையில் பொங்கும் பொங்கல், தூரத்தில் சூரியன், வணங்கும் நிலையில் ஒரு குடும்பம் என ஒரு பக்கம் முழுவதும் நிறைந்து இருக்கும். மேலே அழகான வண்ணத்தில் “பொங்கல் வாழ்த்து” என்று அச்சிடப்பட்டிருக்கும். அடடா, அந்த வழு வழு அட்டையைக் கையில் வாங்கும் சுகமே அலாதிதான்.


சிறுவயதில், பொங்கல் சமயத்தில், எங்கள் தெருவில் மதியம் 12 மணியானால், எனக்கெல்லாம் பரபரவென்றிருக்கும். போஸ்ட் மேன் தெருவுக்குள் நுழையும்போதே, க்ணிங் க்ணிங் என்ற அந்த சைக்கிள் மணி ஓசை கேட்கும். அடுத்த விநாடி, எங்கிருந்தாலும் ஓடிப்போய் ரோட்டில் நின்று, 

“எங்க வீட்டுக்கு தபால் வந்திருக்கா?” என்று கேட்டு.

”இரு பாத்துச் சொல்லுறேன்.” என்று அவர் கடிதங்களைப் பார்க்கும் வினாடிகளை இன்றைய சூப்பர் சிங்கர் முடிவு அறிவிக்கும் நேர டென்ஷனோடு ஒப்பிடலாம்.

”இருக்கு!” என்ற ஒற்றைச்சொல், என்னைக் குதூகலிக்க வைத்து, பரபரத்து கைநீட்டிக்காத்திருக்கும் நொடிகளை இப்போதும் உணர முடியும்.

பொங்கல் நெருங்க நெருங்க, போஸ்ட் மேன் நம் கையில் தரும் வாழ்த்துக்களின் எண்ணிக்கையும் கூடும்.

அதையெல்லாம் வாங்கி, வீட்டு வாசலிலிருந்து, வீட்டுக்குள் சென்று சேர்வதற்கு முன், யாரிடமிருந்தெல்லாம் வந்திருக்கிறது என்று பார்த்து, அதனைச் சத்தமிட்டுச் சொல்லி, பாட்டி அல்லது தாத்தா கையில் சேர்ப்பிக்கும்போது ஆஹா.. அது ஒரு தனி மகிழ்ச்சி பாஸ்!

பிறகு, அந்த வாழ்த்துக்கள் பிரிக்கப்படும். அட்டைகளாக இருந்தால், உடனே படித்துப் பார்ப்போம். கவருடன இருந்தால் அதனை மிகவும் கவனமாக ஒரு கத்தி வைத்து தாத்தா கிழிப்பார். ஒவ்வொரு வாழ்த்தும் அனைவரது கைகளுக்கும் சென்று வரும். யார் பெயரெல்லாம் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கப்படும். ஒரு சில காலகட்டங்களில் எங்கள் வீட்டில் 12 பேர் வரை ஒன்றாக இருந்தோம். 
அப்போதெல்லாம், அந்த வாழ்த்தில் நம் பெயரும் போட்டிருக்கிறார்களா என்று பார்ப்பதில் இரகசிய ஆசை அனைவருக்கும் இருக்கும். ஒவ்வொரு வாழ்த்திலும் என் பெயரைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ந்திருக்கிறேன்.

ஒவ்வொரு உறவும், அவரவர்கள் விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்றார்போல், அழகாக அச்சிடப்பட்ட பெரிய வாழ்த்துக்கள் வைக்கப்பட்ட கவர்கள், ஒருபக்கம் மட்டும் படம் உள்ள வாழ்த்து அட்டைகள், 15 பைசா போஸ்ட் கார்டில் , கைகளால் வரையப்பட்டு, அழகான எழுத்துக்களைத் தாங்கிவரும் வாழ்த்துக்கள், என விதவிதமாக பொங்கல் வாழ்த்துக்களை அனுப்புவார்கள். அப்பாவின் உறவினர்கள், அம்மாவின் பந்தங்கள், பாட்டிக்குத் தெரிந்தவர்கள், தாத்தாவின் சொந்தங்கள் என பலரிடமிருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவியும். வங்கியில் சில சொந்தங்கள் இருந்ததால், அந்தக் காலகட்டத்திலேயே வங்கிகளின் பொங்கல் வாழ்த்துக்கள் கூட வீட்டுக்கு வரும். 

ஒவ்வொரு வாழ்த்து வந்ததும், யாரிடமிருந்தெல்லாம் இன்னும் வரவில்லை என்று ஒரு விவாதம் நடக்கும். பொங்கலுக்கு முந்தைய கடைசி நாட்களில், அவர்களெல்லாம் அனுப்பிவிடுவார்கள். சில நேரங்களில் எதிர்பார்க்காத இடத்திலிருந்தெல்லாம் வாழ்த்துக்கள் வந்து உறவுகளை பலப்படுத்தும்.

எல்லா பொங்கல் வாழ்த்துக்களும் ஒரு மேசையின் இழுப்பறையில், வேலை விட்டு வரும் அப்பா உள்ளிட்ட பெரியவர்கள் வந்து பார்க்கும் வகையில் வைக்கப்படும். அவர்கள் பார்த்து முடித்தபின், அவற்றை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்வோம். நான் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் பொங்கல் வாழ்த்துக்களைச் சேகரித்து கறம்பக்குடி வீட்டில், ஒரு மரப்பெட்டியில் போட்டு வைத்திருந்தேன். வேலைக்காக வெளிநாடு சென்று திரும்பும்போது அந்த மரப்பெட்டியை கரையான் தின்றிருந்தது. கண்டதும் ,சில நிமிடங்கள் அழுதுவிட்டேன். அத்தனை வருட உறவுகளின் தொகுப்பின் இழப்பும், அதன் வலியும் இன்றும் உள்ளத்துக்குள் உள்ளது.

பள்ளி நாட்களில் நண்பர்களுக்குள் வாழ்த்துக்கள் அனுப்பிக்கொள்வோம். எனக்கு பல நண்பர்கள் அனுப்பும் வாழ்த்துக்களில், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோர் அதிகம் இடம்பெறுவார்கள். சதாசிவம் என்ற நண்பன் ராமராஜன் படத்தை நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தாக அனுப்பி வைத்ததற்காக , லீவு முடிந்து பள்ளி சென்றபோது அடி நொறுக்கிவிட்டோம். மேலும் சில்க், டிஸ்கோ சாந்தி, அபிலாஷா போன்ற நடிகைகள் படத்தை யாராவது வம்பிழுக்க அனுப்பிவைத்துவிடுவார்கள் வீட்டில் பதில் சொல்வதற்குள் தாவு தீர்ந்துவிடும் .எங்களுடன் படித்த ரேவதி, கனகா வெறியர்கள் தங்கள் பெயருக்கு முன்னால், பெருமையாக ரேவதி பாஸ்கர், கனகா மணிவேல் என்று போட்டே அனுப்புவார்கள். அதனால் பிழைத்தோம். இதில் மணிவேல் ஒரு ஹார்ட்கோர் கனகா வெறியன். அவன் தாவணி மட்டும்தான் கட்டியதில்லை. பாக்கி அனைத்தும் செய்துவிடுவான். அதுவும் தாலாட்டுக் கேட்குதம்மா வந்த புதிதில் அவன் படுத்திய பாடுகள்…அது ஒரு தனி நாவல் எழுதலாம். 

காதலுக்கு உதவுவதில் பொங்கல் வாழ்த்துக்கு பெரும் பங்கு உண்டு. என் வகுப்பில் ஒரு நண்பன், அவன் டாவடிக்கும் பெண்ணுக்கு ஹார்ட்டின் படம் போட்டு, இன்னொரு மாணவியின் பெயர் போட்டு பொஙகல் வாழ்த்து அனுப்பிவிட்டான். அவள் சரியாக இவன் கையெழுத்தை அடையாளம் கண்டுபிடித்து, இவன் முகவரிக்கு, தன் பெயரைக் குறிப்பிட்டு, “நன்றி” கார்டு போட்டுவிட்டாள். நம் ஆளுக்கு வீட்டில் ஆட்டம் காலி! இவனுக்கு தனியாக பொங்கல் வைத்துவிட்டார்கள். இதில் உச்சகட்டம் என்னவென்றால், அவர்கள் இருவரும் இப்போது கணவன் -மனைவி!

மேலும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் பயன்படும். அஞ்சல் துறை மூலம் அனுப்பும் வாழ்த்தில் ஸ்டாம்ப் ஒட்டாமல் அனுப்பிவிட்டால் போதும். செத்தான் எதிரி! தண்டம் கட்டி, கார்டை வாங்கி வைத்துக்கொண்டு, அனுப்பியவனிடம் வம்படியாக வசூல் செய்வார்கள் அல்லது அந்த உறவே அந்துபோய்விடும்.

பள்ளிக்காலத்தில், எல்லோருக்கும் தனியாக வாழ்த்து அனுப்பும் அளவுக்கு எனக்கு வசதி இல்லாததால், ஒரு போஸ்ட் கார்டில் என்னால் முடிந்த அளவுக்கு டிசைன் செய்து, எங்கள் வகுப்பின் பெயர் போட்டு பள்ளிக்கூடத்துக்கே அனுப்பிவிடுவேன். அதனை நானே போய் ஆஃபீஸ் ரூமில் வாங்கி வகுப்பில் கொண்டு வந்து காட்டுவேன். “கஞ்சப்பய” என்று ஓட்டினாலும், ஐடியாவை மெச்சுவார்கள். 

பதினொன்றாவது படிக்கும்போது, எனக்கு ஒரு பேனா நண்பன் இருந்தான். அவன் அனுப்பிய முயல் படத்தில் அதன் கண்களுக்கு சிவப்பு குந்துமணிகள் ஒட்டிய அந்த வாழ்த்தை பொக்கிஷமாக வைத்திருந்தேன். என் ஓவியத்திறமை(!) அனைத்தையும் காட்டி, வைக்கோலை வெட்டி ஒட்டி ஒரு வாழ்த்தும் நன்றியும் அவனுக்கு அனுப்பியிருந்தேன். காலப்போக்கில் சில நெருங்கிய நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் இருந்தது. அதுவும் இப்போது காணாமல் போய்விட்டது.


பொங்கல் வாழ்த்து அனுப்புவதற்கு அடுத்த கட்டம் ஒன்றிருந்தது. அது “நன்றி” கார்டு அனுப்பும் வழக்கம். வந்திருந்த ஒவ்வொரு பொங்கல் வாழ்த்துக்கும் , நன்றி கார்டு அனுப்பி உங்கள் வாழ்த்து வந்து சேர்ந்தது என்று உறுதிப்படுத்தவும். தங்கள் நன்றியைப் பதிவு செய்யவும் இந்தப்பழக்கம் பயன்பட்டது. அத்தகைய கார்டுகள் விதவிதமாக இருக்கும். ஏர் இந்தியா மஹாராஜா நன்றி சொல்லுவார். ஒரு பெண்ணின் கைகள் மட்டும் நன்றி சொல்லும். ஒரு குழந்தை நன்றி சொல்லும். தலவரின் சல்யூட் கூட நன்றி கார்டுக்குப் பயன்படும். பல விதங்களில் நன்றி கார்டுகள் வலம் வரும். நன்றி கார்டு என்பது எதிர் மொய் வைப்பது போன்ற கௌரவமாகப் பார்க்கப்பட்ட காலங்களெல்லாம் உண்டு. 

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் , கால ஓட்டத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் வேறு தளத்துக்கு வந்து, முதலில் நம்மை அழைக்கும், தொலைபேசி வாழ்த்தாகி, பின்னர் நம் மின்னஞ்சலுக்கு வரும் மெயில் வாழ்த்தாகி, அதற்கடுத்து, மொத்தமாக குழுவுக்கு அனுப்பும் குறுஞ்செய்தி வாழ்த்தாகி, அதுவும் மாறி இணைப்பிலிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரே வார்த்தையில் வாழ்த்துச்சொல்லும் முகநூல் வாழ்த்தாக வந்திருக்கிறது. நேர சேமிப்பாகத் தெரிந்தாலும், பொங்கல் வாழ்த்து அனுப்பிய காலத்திலிருந்த ஒட்டுதல் குறைந்ததாகவே உணர்கிறேன். தபால் அனுப்பும் நேரத்தை விட முகநூலில் அதிகம் நேரம் செலவழிக்கிறோம் என்பதும் உண்மை! உணர்வுகளால் சூழப்பட்ட என்னைப்போன்ற ஆட்களுக்கு, அழகான படங்களுடனும், எழுதியவரின் கையெழுத்து இது என்று தொட்டுணரும் பொங்கல் வாழ்த்துடன் எதையும் ஒப்பிட இயலவில்லை. எண்ணங்களில் பல்வேறு கேள்விகள்!

அச்சிடப்பட்டு, விற்காமல் மீதமுள்ள பொங்கல் வாழ்த்துக்களெல்லாம் எங்கிருக்கும்?

இதை நம்பித் தொழில் செய்தவர்களெல்லாம் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?

எங்கள் ஊர் தபால்காரர் பொங்கல் நேரத்தில் எத்தனை கடிதங்களை டெலிவரி செய்வார்?

என் போன்று யாராவது பழைய பொங்கல் வாழ்த்துக்களை சேகரித்து வைத்திருப்பார்களா?

இன்றைய பள்ளிச் சிறுவர்களுக்கு அப்படி ஒரு பொருள் இருந்தது தெரியுமா?

இப்போதைய ஒவ்வொரு பொங்கலும் , அந்த ‘பொங்கல் வாழ்த்து, நன்றி கார்டு ‘ இல்லாமல்தான் கழிகிறது. அதனால்தானோ என்னவோ, பெரிய சுவாரஸ்யம் இல்லை. நமக்கென்று வயலில்லை, வரப்பில்லை, விவசாயமில்லை, கரும்புத் தோட்டமில்லை. கடைசியில் பொங்கல் வாழ்த்தும் இல்லாமல் போய்விட்டது.

இதையெல்லாம் எண்ணிப்பார்த்து, நான் மீண்டும் பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பத் துவங்கலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம். என் பேச்சை நானே கேட்கிறேனா என்று ?


டிஸ்கி: 

இந்த பதிவுக்காக பொங்கல் வாழ்த்து அட்டையின் படங்களை இணையத்தில் தேடும்போது மிக அரிதாகத்தான் புகைப்படங்கள் கிடைத்தன.

அப்படிப்பட்ட ஒரு படம்தான் இங்கு இருப்பதும்... ஆனால்,  அதை விட அரிதான கட்டுரை, இதே எண்ணத்தைப் பிரதிபலித்தது. பட உதவியும் அந்தத் தளம்தான் செய்தது.!

அதனை இங்கு பதிவதில் பெருமையடைகிறேன்.





தனிப் பக்கத்தில் காண →
29 Dec 2013அனுபவம்

ஹெல்மெட்




சென்ற ஜுலையில் ஒரு நாள்!

அன்று தொலைக்காட்சியில் நேரலை. 2 மணிநேரம் தொடர் நிகழ்ச்சி..! முடித்துவிட்டு வெளியில் வந்தால், மதியம் மணி 2 என்றது.
வீட்டிலிருந்து அழைப்பு!

சாப்பிட வரீங்களா?

ஆமாம்.. இதோ சேனல்லேருந்து கிளம்பிட்டேன். இன்னும் 15 நிமிஷத்தில் வீட்டில் இருப்பேன்.

என்று சொல்லிவிட்டு, பைக்கைக் கிளப்பினேன்.

காசி தியேட்டர் சிக்னல் தாண்டி, .அடுத்த நூறு மீட்டரில், BSNL அருகில் சிக்னல் இல்லாமல் ஒரு சந்திப்பு. அதில் திடீரென்று நான்கைந்து வாகனங்கள் இடது புறத்திலிருந்து குறுக்கிட, நானும் என் அருகில் வந்துகொண்டிருந்த காரும் கொஞ்சம் நிதானித்து நிறுத்தினோம்.

நான் வண்டியை நிறுத்திய கணம் ‘டொம்’ என்ற ஒரு சத்தம் கேட்டது.

மறுவிநாடி நான் வானத்தில் பறந்துகொண்டிருந்தேன்.

என் பைக் எனக்கு முன்னால், தரையில் பயணித்துக்கொண்டிருந்தது. சாலையில் நேராகப் போய் மோதப்போகிறோம் என்று தெரியும். ஆனால் என்ன செய்வது என்று முடிவெடுக்கத் தோன்றவில்லை. நேரமும் இல்லை. கை கால்கள் இலக்கின்றி அலைகின்றன.

“ச்சொட்” என்ற சத்தத்துடன் என் தலை நேரடியாகச் சாலையில் மோதியது. உடல் எடை முழுவதும் தலையில் இறங்கி அது, தரையிலும் இறங்குவதை அந்த நொடி உணர முடிந்தது.

ஆனால், அதிசயமாக, ஒரு கீறல் கூட இல்லாமல் எழுந்தேன். வலது கணுக்காலில் மட்டும் சரியான வலி! நிச்சயம் எலும்பு உடைந்திருக்க வேண்டும்.

சுற்றி இருந்தவர்கள் ஓடிவந்தார்கள். என் பைக்கிலிருந்து பெட்ரோல் சாலையில் வழிந்துகொண்டிருந்தது. ஆளாளுக்கு உதவி செய்துகொண்டிருந்தார்கள்.

என் பேனாவை ஒருவர் எடுத்துக்கொடுத்தார்.

பைக்கை நிமிர்த்தி, சாலையோரம் ஒருவர் நிறுத்தினார்.

ஒரு ஸ்கூட்டி பெண்மணி
“இப்பத்தான் உங்கள டிவில பாத்தேன்.. என்னாச்சு சார்? ” என்று அக்கறையுடன் விசாரித்தார்.

அப்படி இன்னா வேகமா வந்து இப்டி இட்ச்சிட்டு நிக்கிற? என்று அவர்கள் கைநீட்டித் திட்டிக்கொண்டிருந்தபோதுதான் கவனித்தேன். என்னை மோதிய அந்தக் காரின் ஓட்டுநரை!

என் பைக்கில் மோதியது ஒரு நட்சத்திர ஹோட்டலின் டிராவல் டெஸ்கின் கார்! அது மோதிய வேகத்தில்தான் நானும் பைக்கும் நிலை குலைந்திருக்கிறோம். காரின் நம்பர் ப்ளேட் கீழே கிடந்தது. அதனை எடுத்து வைத்துக்கொண்டு, அந்தக் கார் ஓட்டுநரை எல்லோரும் திட்ட, அந்த இளைஞனும் பயந்துவிட்டான்.

என்னைச் சுற்றி சிலர்.. அவனை விசாரிக்க சிலர் என்று இருக்க..

நான் அருகில் சென்றேன்.

அவனும் என்னிடம் ஓடிவந்தான்.

“ரொம்ப அடிபட்டிருச்சா சார்?. ஸாரி சார்! பேஸஞ்சர் வேகமா போங்க!ன்னாங்க ! புத்தி கெட்டுப்போச்சு! உங்க வண்டியை ஓரமா நிறுத்திட்டு வாங்க! காரில் ஆஸ்பத்திரி கூட்டிட்டுப்போறேன். என்று தீர்வை நோக்கிப் பேசினான்.

நானும் சண்டை போடும் மனநிலையில் இல்லாமலும், அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலும் இருந்ததால்,
“சரி வாங்க போலாம்” என்று சொன்னேன்.

ஆனால், அந்தக் காரில் பயணியாக வந்தது ஒரு தனியார் விமானப் பணிப்பெண். அவள் மனிதாபிமானத்துக்குக் கூட காரை விட்டு இறங்கவில்லை.

தனக்கான மாற்றுக்காரை ஏற்பாடுசெய்துவிட்டு , எங்குவேண்டுமானாலும் போ! என்று சொல்லியிருக்கிறாள்.

நான் சிரித்துக்கொண்டே அவளைப் பார்த்தேன். வெள்ளைத் தோலுடன்,முகம் முழுக்க சரியான அலங்காரத்துடன், அழகாகத் தெரியவேண்டியவள், அப்போது மிகவும் அசிங்கமாகத் தெரிந்தாள். சுற்றியிருந்தவர்கள் போட்ட சத்தத்தில் , காரை விட்டு இறங்கி, செல்ஃபோனை நோண்டிக்கொண்டே, சடுதியில் காணாமல் போனாள்.

அதற்குப் பிறகு , அருகிலேயே “மாயா” மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவர் மிகவும் நட்பாக உரையாடி, காலுக்கு மட்டும் எக்ஸ்ரே எடுத்து, கணுக்காலில் ஒரு எலும்பு மிக மிக லேசாக விரிசல் விட்டிருப்பதாகவும். ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்றும் சொன்னார். அதற்குள் அந்த நட்சத்திர ஹோட்டலின் மேலாளர் உள்ளிட்ட இரண்டுபேர் வந்து என்னைப் பார்த்து, விசாரித்து, மருத்துவச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார்கள். பைக் சரி செய்யும் செலவையும் ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி, எண்கள் கொடுத்து, தனியாகச் சென்றுவிடுவீர்களா? வீட்டில் கொண்டு வந்து விடட்டுமா என்று கேட்டு, நான் வேண்டாம் போய்விடுவேன் என்று சொன்னதும்தான் சென்றார்கள்.

ஆனால் இவையெல்லாம் நடந்தேறும்போது நேரம் 4 மணி ஆகியிருந்தது.

வீட்டிலிருந்து 11 மிஸ்டு கால்கள்!

அழைத்தேன்.

கிளம்பிட்டேன் இன்னும் 15 நிமிஷத்தில் வரேன்னீங்க !! ரெண்டு மணி நேரமாச்சு! எங்க இருக்கீங்க? என்று அந்தப்பக்கம் கேட்க,

“ஒரு சின்ன வேலையாயிடுச்சும்மா! கொஞ்ச நேரத்தில் வந்துருவேன். நீ சாப்பிட்டுரு” என்றேன்.

பரவால்ல…சீக்கிரம் வாங்க ! சேந்து சாப்பிடுவோம்.! என்றது எதிர்முனை!

கண்ணீர் துளிர்க்க, ஒரு கலவையான மனநிலையுடன் பைக்கை எடுத்தேன்.

மகிழ்ச்சியாக சேனலிலிருந்து கிளம்பிய நான், வீட்டிற்கு போய் சேராமலேயே இருந்திருப்பேன். அந்த விபத்தில், என் தலை சாலையில் நேரடியாக மோதி, நான் கனவுகளுடன் சிதறிப்போவதை தடுத்து நிறுத்திய ஒரே பொருள்… ஹெல்மெட்!

விபத்து நடந்து சில நிமிடங்கள் வரை நான் ஹெல்மெட்டைக் கழட்டாமலேதான் நின்றுகொண்டிருந்தேன். யாரோதான் கழட்டி விட்டார்கள். அதற்குப்பிறகுதான் ஒரு சிலர் “எங்கேயோ பார்த்திருக்கிறேன்” என்ற ரீதியில் பேசினார்கள். எனக்கு “ஹெல்மெட் மட்டும் இல்லைன்னா?” என்ற சிந்தனைதான் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

வானில் பறந்துகொண்டிருந்த அந்த வினாடியும், தரையில் தலை மோதியபோது ஏற்பட்ட சத்தத்தையும் இன்னும் நான் அனுபவித்து, நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த சம்பவம் நடப்பதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர்தான், எனது உறவினர் ஒருவர், சாலை விபத்தில் தலையில் காயம்பட்டு உயிரிழந்தார். அவர் செய்த ஒரே தவறு ஹெல்மெட் அணியாததுதான்.!!

எப்போதுமே ஹெல்மெட் போடுவதை நான் விரும்பிச் செய்வேன். ஏனெனில் , முகம் நேரடியாக வெயிலில் படாது. கண்களில் தூசி விழாது. குறிப்பாக, தேவையில்லாமல், போக்குவரத்துக் காவலர்களிடம் பதில் சொல்ல வேண்டியிருக்காது. அவர்கள் முதலில் சொல்வதே “உங்க நல்லதுக்குத்தானே சார் சொல்லுறோம்?”

ஆனால், அதையெல்லாம் மீறி அதன் உண்மையான வேலையான, உயிர்காக்கும் செயலை மிக அற்புதமாகச் செய்து தெய்வமாகவே மாறிப்போனது எனது ஹெல்மெட்!

பொதுவாக நாம் ஹெல்மெட் போடாததற்கு சொல்லும் சப்பைக் காரணங்கள்.. முடி கொட்டுது!  வேர்த்துக்கொட்டுது,  uneasyஆக இருக்கு! ஆகியவைதான். இதையெல்லாம் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்க பாஸ்! நமக்காக வீட்டில் சாப்பிடாம காத்திருப்பாங்க! அவங்க கண்ணீருக்கு நம்ம காரணமாகிடக்கூடாது.

இது என் அறிவுரையெல்லாம் இல்லை. ஆனால், அந்த மரண வினாடியை அனுபவித்தவன் சொல்கிறேன்.

தயவுசெய்து ஹெல்மெட் அணியுங்கள்.!


தலை முடியை விட, உயிர் முக்கியம்!


தனிப் பக்கத்தில் காண →
31 Oct 2013புது மீள்பதிவு

நீயெல்லாம் நண்பனாடா?








என் பள்ளி நாட்களில் சங்கர் ன்னு கிளாஸ்மேட் ஒருத்தன் இருந்தான், படிக்கும்போதே ரொம்ப அலைப்பறையக்குடுப்பான். எல்லாரையும் கலாய்ப்பான். நட்புன்னா இப்படித்தான் இருக்கணும்னு லெக்சரெல்லாம் குடுப்பான்.எல்லாரையும் காலைக்காட்சிக்குபோகலாம்னு கிளப்பிவிட்டுட்டு பசங்க எல்லாம் கவுண்ட்டரில் வரிசையில் நிக்கும்போது நைஸா எஸ்கேப் ஆகி வாத்தியார்க்கிட்ட போட்டுக்குடுப்பான்.
ஏண்டா இப்படிப்பண்ணினன்னு கேட்டா...
நட்புன்னா நீங்க கெட்டுப்போறதை தடுக்கணும்டான்னு கருத்து சொல்லுவான்!
நீதானேடா கூப்புட்டன்னா,
நான் உங்களை டெஸ்ட் பண்ணினேன்னு சொல்லி டெரர் பண்ணுவான்.
அவன் நல்லவனா ? கெட்டவனா? ன்னு யோசிச்சு யோசிச்சே பசங்க எல்லாம் படிப்பை கோட்டை விடும் அளவுக்கு லந்து பண்ணுவான்.

கட் பண்ணினா...நாங்கள்லாம் +2க்கு அப்புறம் ஏதோ படிச்சு ஆளுக்கொரு வேலையில் தொத்திக்கிட்டோம்.

அது நான் சென்னையில் வேலைக்கு சேந்திருந்த நேரம்..! பட்டுக்கோட்டையில் நண்பனோட சேந்து டீ ஏஜென்ஸி எடுத்து நடத்திக்கிட்டிருந்தோம். நான் வாரம் ஒருதடவை அல்லது ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைன்னு போய்வந்துக்கிட்டிருந்தேன்.

அப்படி ஒருநாள் வந்தப்ப ,முருகையா தியேட்டருக்கு படம் பாக்கப்போகும்போது, டிக்கெட் கவுண்ட்டரில் கையை வுட்டா உள்ளேருந்து -நட்பைப்பத்தி ஒரு லெக்சர் கேக்குது- அட நம்ம சங்கரு! ன்னு சந்தோஷமாகி...

என்னடா இங்கன்னு கேக்க!

அது ஒரு மேட்டரு மாப்புள! ன்னான்.

என்ன மேட்டருடா?

இரு டிக்கெட் குடுத்துட்டு வந்து சொல்றேன்.

சரின்னு..படத்தின் சுவாரஸ்யத்தைவிட நம்ம நண்பன் ஒருத்தன் ஒரு தியேட்டரில் டிக்கெட் குடுக்குற அளவுக்கு வளந்திருக்கானேன்னு பெருமையா (!) அதன் பிண்ணனி தெரிஞ்சுக்குற ஆவலில் காத்திருந்தேன்.
கிடைச்ச கேப்பில் அவனைப்பாத்து என்னடான்னு கேக்க,
அது ஒரு இது நம்ம ப்ரெண்டோட தியேட்டர்...டிக்கெட் யாருமே சரியா குடுக்குறதில்லையாம் ! (அதுல என்ன சரியா குடுக்குறதுன்னு இன்னிக்கு வரைக்கும் நான் தலையைப்பிச்சிக்கிட்டிருக்கேன் )நான் கரெக்டா வேலை பாப்பேன்ல ! அதான் நான் நட்புக்காக உதவி பண்ண வந்தேன்னான்.
(உள்ளபடியே படிப்பை நிறுத்திட்டு சம்பளத்துக்கு தியேட்டரில் வேலைக்கு சேந்திருக்கான் டுபாக்கூரு)


சரிடா ! எப்படியோ நல்லா இருன்னுட்டு.....பெரிய மேட்டரா எதிர்பார்த்தது இப்படி 'சப் 'ன்னு போச்சேன்னு கவலைப்பட்டுக்கிட்டே படம் பாத்துட்டு வெளில வந்தா...மறுபடியும்
சங்கரு!
என்னடா..!
நீ எங்க தங்கியிருக்க?
இடத்தைச்சொன்னேன்.
தியேட்டருக்குள் யாரோ அழைக்க உள்ளே போய்ட்டான்.

இது நடந்து 2 மாசத்தில்..
ஒரு நாள் நள்ளிரவு...அன்று நானும் அங்க இருந்தேன். டப டபன்னு கதவு தட்டப்பட...
திறந்தால்...கையில் ஒரு பையுடன் வேர்க்க விறுவிறுக்க சங்கர் !
என்னடா இந்தக்கோலம்?

இல்ல மாப்புள ஓடிப்போறோம்.

என்னது ? ஓடிப்போறியா? எங்க ? யாரோட?

அப்பதான் சொன்னான்.

டிக்கெட் கொடுக்கும்போது உள்ள ஒரு வெள்ளைக்கை நுழைஞ்சது...அதுக்கான முகம் எதுன்னு பாக்கப்போய்...அந்தப்பொண்ணு பழக்கமாச்சு...! நான் தியேட்டர்க்காரரோட ப்ரெண்டுன்னு (எங்களிடம் சொன்ன அதே கதையை) அந்தப்பொண்ணிடமும் சொல்ல, நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சோம். இப்ப அவுங்க வூட்டுல ஒத்துக்கமாட்டேங்கிறாங்க! நாங்க ஓடிப்போலாம்னு முடிவுக்கு வந்துட்டோம். அதான் பஸ்ஸ்டாண்டுல ஒளிச்சுவச்சுட்டு வந்திருக்கேன். கோயம்புத்தூர் போலாம்னு ப்ளான் போட்டிருக்கேன்னான்.
எனக்கு கடுமையான அதிர்ச்சி!
ஒருபக்கம் என்னடாது இப்படி திடீர்ன்னு ஒரு முடிவு எடுத்துருக்கானேன்னு !
மறுபக்கம்..இவனுக்கெல்லாம் காதலிக்க பொண்ணு கிடைக்குதே, நாமளும்தான் இருக்கோமேன்னு புகைச்சல் வேற !

சரிடா...இருந்தாலும் இதெல்லாம் தப்புடா ! நீ மரியாதையா அந்தப்பொண்ணை அவுங்க வூட்டுல விட்டுட்டு ஒழுங்கா உன் வேலையப்பாருன்னு லேசான வில்லத்தனத்துடன் நான் சொல்ல,

பரவாயில்ல மாப்புள ..! செஞ்சது செஞ்சுட்ட ! நல்லபடியா போய்ட்டுவான்னு என் நண்பன் சொல்ல...

சங்கருக்கு வந்ததே கோபம்..
என்னது? உங்கிட்ட ஆசீர்வாதமோ அட்வைஸோ வாங்கவா நான் வந்தேன்.! நீங்கள்லாம் ப்ரெண்டாடா.. ? நட்புன்னா என்னன்னு தெரியுமா? உங்களுக்கு எங்க தெரியப்போகுது...இந்த வயசிலேயே பிஸினஸ் பண்ணி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டீங்கங்கிற திமிரு! சரி சரி...அதெல்லாம் போகட்டும். 1000 ரூபா காசு குடுங்க! ன்னு அடுத்த அதிர்ச்சி கொடுத்தான்.

என்னது? காசா?

ஆமா ! கிளம்புற அவசரத்துல காசைப்பத்தி யோசிக்கலை! எங்கிட்ட காசு சுத்தமா இல்ல! அந்தப்பொண்ணுக்கிட்ட அதைச்சொன்னா என்னை என்ன நினைக்கும்..? அதான் உங்கிட்ட குடுத்து வச்சிருக்கேன், வாங்கிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்னு அடுத்த குண்டை தூக்கிப்போட்டான்.

காசெல்லாம் தரமுடியாது! - இது நான்!

போனாப்போறான்டா ! ஏதாவது குடுத்தனுப்புவோம்...நம்பளை நம்பி வந்துருக்கான்! - இது என் நண்பன்!

என்னடா பட்டிமன்றம் நடத்திக்கிட்டிருக்கீங்க! மரியாதையா காசைக்கொடுத்து
அனுப்பிவைங்கடா! பெத்த அப்பா அம்மாக்கிட்டகூட சொல்லிக்காம ,வாழலாம்னு ஓடிப்போக உங்ககிட்ட வந்து நிக்கிறேன் பாரு...! என்னையச்சொல்லணும்! என்னமோ உண்மையிலேயே குடுத்துவச்சவன் மாதிரி கோவிச்சுக்கிட்டான்.

நான் பிடிவாதமா மறுத்தேன். டேய் இந்தக்காச வச்சுக்கிட்டு 3 நாள்கூட ஓட்டமுடியாது! அப்புறம் எப்படிடா சமாளிப்ப?

இல்ல..! கோயமுத்தூர்ல எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க அவுங்க வேலை வாங்கித்தந்துருவாங்க! சமாளிச்சுருவேன்.

சரிடா..வேலயே கிடைச்சாலும் ஒரு மாசம் கழிச்சுத்தானே சம்பளம் கிடைக்கும்...! அதுவரைக்கும் என்ன பண்ணுவ? நான் இப்ப கிளம்பாத....உன்னைய கொஞ்சம் ஸ்டடி பண்ணிக்கிட்டு ஓடிப்போன்னு சொல்றேன்.

டேய் என்னடா இவன் இவ்வளவு விதண்டாவாதமா பேசுறான்..! என் நிலைமையப்புரிஞ்சுக்குங்கடா ! அந்தப்புள்ள காத்துக்கிட்டிருக்கு ! இப்ப உங்க அட்வைஸெல்லாம் வேண்டாம்டா...காசுதான் வேணும்...நண்பன்னா அவனவன் வேன் வச்சு கூட்டிட்டுப்போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிவைக்கிறாய்ங்க..நீங்க என்னடான்னா பிச்சைக்காசு(!) 1000 ரூவாய்க்கு அழுவுறீங்க! - நாங்கள் அவன் பாக்கெட்டில் இருந்து எடுத்ததை குடுக்காதது மாதிரி ராவடி பண்ண ஆரம்பிச்சான்.

என் வாதம் பலவீனப்பட ஆரம்பிக்க, என் நண்பன் காசை எடுத்துக்கொடுத்துட்டான்.

அப்பவும்....என்னமோ அவன் சோத்தில் மண்ணள்ளிப்போட்டமாதிரியே
முறைச்சுக்கிட்டே...போய்ட்டு வரேன்டா..! உன் காசை மணியார்டர் பண்ணி வச்சுடுறேன் னான்.

அப்புறம் அவனை மறந்தே போனோம்....!

7 வருஷத்துக்கப்புறம் , கோயம்புத்தூரில் ஒரு சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்கு உதவி செய்யப்போனப்ப, பாத்திரம் வாங்க ஒரு பெரிய கடைக்குப் போனோம். பாத்திரமெல்லாம் வாங்கிட்டு , பேர் வெட்டணும்னா அங்க வாசல்ல உக்காந்திருக்கிறவர்க்கிட்ட கொடுங்கன்னு சொல்ல, பாத்திரத்தைக்கொண்டு போய் வச்சா...பேர் வெட்டுற எடத்தில்...அட..! 
நம்ம சங்கரு!

பாத்தவுடனே...டேய் ! சங்கரு! எப்படிடா இருக்க?

திடீர்ன்னு எழுந்தான்..என் சட்டையப்பிடிச்சான்..!

நீயெல்லாம் ப்ரெண்டாடா..? நட்புன்னா என்னன்னு தெரியுமாடா?

எனக்கு ஒண்ணுமே புரியலை! என்ன ஆச்சு இவனுக்கு?

ஏண்டா..நாங்கதான் பணம் குடுத்துத்தானே அனுப்பி வச்சோம்!?

அதத்தாண்டா சொல்றேன்....ஏன்டா அனுப்பி வச்சீங்க! ஒரு அறை அறைஞ்சு ரூமுக்குள்ள வச்சு பூட்டியிருந்தீங்கன்னா...இப்படி நான் சீரழிஞ்சு சிரிப்பா சிரிக்கமாட்டேன்ல..! ஓடிவந்து...சரியான வேலை இல்லாம, நாங்க ரெண்டுபேருமே செரமப்பட்டு ....அந்தப்புள்ளயும் வேலைக்குப்போய்,
தெனம் சண்டை போட்டுக்கிட்டு - பொழப்பே நாறிப்போச்சு..! என் வாழ்க்கையையே கெடுத்துட்டீங்களேடா...- இன்னும் பேசிக்கொண்டே போனான்.

அன்னிக்குத்தான் நான் உண்மையிலேயே மண்டை காஞ்சேன்...!
தனிப் பக்கத்தில் காண →
29 Sep 2013

இரண்டு மகிழ்வுரைகளும் ஒரு புத்தகமும்

.



எஸ்கேப் - என்று ஆங்கிலப்பெயர் வைக்கப்பட்டு , என்னால் எழுதப்பட்ட, பிஸினஸ் நாவல் வகையைச் சேர்ந்த புத்தகத்துக்கு தனது அழகான மகிழ்வுரையைத்தந்த்தவர். டாக்டர்.பால சாண்டில்யன் அவர்கள்.. .அவருக்கு அன்புநிறை நன்றியுடன் அந்த மகிழ்வுரை இதோ!



மகிழ்வுரை

எப்போதும் பரபரப்பாக சுறுசுறுப்பாக இருக்கும் நண்பர் சுரேகா அவர்கள் தொலைபேசியில் ஒரு விண்ணப்பம் வைத்தார். அவரது "எஸ்கேப்" என்கிற நூலினைப் படித்து விட்டு மதிப்புரை வழங்க வேண்டும் என்று.

சுரேகா அவர்கள் நூல்களை ஏற்கனவே படித்தவன் என்கிற அடிப்படையில் ஒப்புக்கொண்டேன் ...ஆனால் ஒரு கண்டிஷன் போட்டு ...அதாவது அது என் மதிப்புரை அல்ல மகிழ்வுரை என்று சொல்லி...!

நூலாசிரியர் சுரேகா மட்டும் பரபரப்பானவர் சுறுசுறுப்பானவர் என்றல்ல. அவர் எழுதுகின்ற நூல்களும் விறுவிறுப்பானவை தான்.

சிங்கம் 2, காஞ்சனா 2, சிறுத்தை 2 என்று திரைப்படம் வரலாம் ...புத்தகங்கள் வரக்கூடாதா ..? அந்த இரண்டாம் பாகத்தை வேறு பெயரிலும் வெளியிடலாமே .. என்ன தவறு ...என்ற அடிப்படையில் coaching, mentoring சம்பந்தமான இந்த நூலுக்கு "மீண்டும் தலைவா" எனப் பெயர் சூட்டாமல் மிக அழகாக "எஸ்கேப்என்று வைத்திருப்பது ரியலி சூப்பர்.

"வேட்கையோடு வெறியோடு விருப்பமோடு வேலை பாரு
வீரமான நடையைப் போடு...நீ வெற்றி எனும் துதியைப் பாடு" ...எனும் தாரக மந்திரம் தான் இந்த நூலின் தனிச்சிறப்பு அல்லது USP.

இது தவிர நண்பர் சுரேகா அவர்கள் ஒரு கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா என்பதை நினைவூட்டும் வகையில் இந்த நூலில் இடம் பெற்றுள்ள சில வரிகள் நிச்சயம் சாட்சி.
அப்படிப்பட்ட வரிகள் இதோ :
  • கற்றல் கதவு அகலமாத் திறந்திருக்கும்
  • மெய் மறந்து…இல்லை இல்லை.. கைமறந்து,  கைதட்டினார்கள்.
  • வளர்ச்சிக்கான வாசலை
  • நல்லவேளை.. வேலையை விடவில்லை.
  • பிடிபடாமல் இருந்த சூட்சுமம் பிடிபட்டிருக்கிறது.
  • வெற்றியாளர்களோட அறிவுப் பகிர்தல்
  • சொத்தா மாறுவதன் சூட்சுமம்
  • ஐந்து நிமிடங்களை யாரோ கயிறுகட்டி வைத்ததுபோல்
  • வளர்ச்சிக்கான வேர்களுக்கும் சேர்த்து வெந்நீர் ஊற்றிவிட்டது
இவரது  "தலைவா வா" நூல் படித்தவர்களுக்கு தெரியும் ஒரு விஷயம் : "குருபெயர்ச்சி' எனும் பயிற்சி நடத்திய குரு சந்திரமௌலி மற்றும் அவரது நேரடி சீடன் விக்னேஷ் ...அவர் எப்படி தனது சொந்த மற்றும் பணி வாழ்வில் முன்னேறி இன்று "777" பயிற்சி நடத்தும் குருவாக வந்துள்ளார் - அதாவது இந்த நூலின் கதாநாயகன்..!

"wow"
என்ன ஒரு ஐடியா ...?  இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் வரும் பாடலை ரேடியோவில் "இந்த பாடலுக்கு இசை இளையராஜா" என்று வரும்படியாக ஒரு காட்சி வைத்தது நினைவுக்கு வருகிறது ..(அந்தப் புத்தகத்தை பற்றி ஒரு வசனம் இந்த நூலின் கதாநாயகன் சொல்லுவது போல் எழுதி இருப்பது)

"குருப்பெயர்ச்சி" பெற பல ஆயிரங்கள் பீஸ் ஆக கட்ட வேண்டும். ஆனால் அதனை ஒரு டிபன் காபி செலவுக்கு தந்தது பாராட்டத் தக்கது

 "777" பயிற்சி 7 பேர் மட்டும் பெறவில்லை. இந்த நூலைப் படிக்கின்ற ஒவ்வொரு வாசகரும் தான். ஏழு நாள் ஒரு சிறப்புப் பயிற்சி பெறுவதற்கு நிறைய செலவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதுவே அந்த அரிய அற்புத அறிவார்ந்த விஷயங்களை 112 பக்கங்களில் விறுவிறுப்பாக ஒரு நாவல் போல நூலாசிரியர் வழங்கி இருப்பது - நூலில் சொல்லப்பட்டுள்ள நிர்வாக மேலாண்மை நுணுக்கங்களை இவர் கரைத்துக் குடித்திருக்கிறார்..அதனைப் பின்பற்றி தன வாழ்வில் முன்னேறி வருகிறார் என்பதனை பறைசாற்றுகிறது.

இன்று சந்தையில் கடைகளில் நூலகங்களில் நாம் காண்கின்ற பெரும்பாலான மேலாண்மை நூல்கள் மூன்று வகைப்பட்டவை : சுய சரிதம், மேல் நாட்டு நூல்களின் மொழிபெயர்ப்பு, மேலாண்மை பற்றி கொஞ்சமே தெரிந்து கொண்டு எல்லாம் தெரிந்தது போல அவரைப் பார், இவரைப் பார் என்றெல்லாம் சொல்கின்ற நூல்கள்.

ஆனால், (ஆனால் எனும் வார்த்தைக்கு பிறகு வருகின்ற விஷயம் பெரும்பாலும் நெகடிவ் ஆக இருக்கும் என்பதால் "ஆனால்" என்கிற வார்த்தை வேண்டாமே என்று நூலின் மாஸ்டர் விக்னேஷ் மூலம் எடுத்து சொன்னாலும் - இது வேற..!) ஒரு மேலாண்மை நூலினை எப்படி ஒரு முறை எடுத்தால் (விறுவிறு கிரைம் நூல் போல, சஸ்பென்ஸ் நூல் போல) கீழே வைக்காமல் படிக்க வைக்க முடியும் ?

வியந்து நயந்து பயந்து பார்க்கிறேன் சுரேகா எனும் ஒரு மேலாண்மை நிபுணரை ..!

எல்லா நூல்களுக்குமே அதன் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா ? அதன் காகிதச் செலவு, அச்சுக்கூலி மற்றும் சிறிது லாபம் சேர்த்து தான். அந்த வகையில் அந்த நூலிலிருந்து நமக்கு கிடைக்கும் விஷயம் ரொம்ப "ஆர்டினரி" யாகத்தான் இருக்கும். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. (மீண்டும்) - ஆனால் இந்த நூல் அப்படி அல்ல ..கொடுக்கிற விலைக்கு நூறு அல்லது ஆயிரம் மடங்கு மதிப்புள்ள விஷயங்கள் கிடைக்கிறது என்பதைப் படித்து முடித்தவர்கள் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

பெறுவதெல்லாம் வழங்கத்தான் என்கிற அடிப்படை விஷயத்தை நமக்கு சொல்லிக் கொடுப்பதே ஒரு சிறு புல் தான். நீரும், ஒளியும், மண்ணின் எருவும் பெற்று வளர்கின்ற புல் - ஆடு மற்றும் மாடு மேய்ந்து திங்கத்தானே

அது போல தான் கற்றுத் தெரிந்ததை, தெளிந்ததை மற்றவருக்கு மாண்புடன், அறிவுடன், பெருந்தன்மையுடன் வழங்கி உள்ளார் இந்த நூல் மூலமாக திரு சுரேகா அவர்கள்.

555 என்றால் ப்ரெஸ்டீஜ். 777 என்றால் ஜாக்பாட்.
இந்த நூல் உங்களுக்கு ஒரு அதியற்புதமான சுகானுபவத்தையும் வெற்றி சூத்திரங்களையும், சூட்சுமங்களையும் அள்ளி வழங்கி உள்ளது.

இதனைப் படித்து முடித்த வாசகர்கள்  எவருமே சுரேகா அவர்களின் சீடர்கள் தான். மறுக்க முடியாது. படித்த விஷயங்கள் மறக்க முடியாது ...மறக்க முடியாதது ...! பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்க வேண்டிய நூல் மட்டும் அல்ல. தம் வாழ்வில் பயன் பெற்று வெற்றி உச்சிக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் காணும் உங்கள் உறவினர், நண்பர் இவர்களுக்கு இந்த நூலினை வாங்கிப் பரிசளியுங்கள். உங்களை தனது வாழ்நாள் உள்ளவரை அவர்கள் மறக்கவே மாட்டார்கள்.
கதாநாயகன் விக்னேஷ் - மனிதன், குரு மட்டும் அல்ல உங்களுக்கான  அபரிமித வாழ்வை வழங்குகின்ற உன்னதக்கடவுள் ...!

இந்தப்பயிற்சியினைப் பெற்ற , முக்கியக் கதாபாத்திரம் நரேந்திரனுக்குள் ஒரு விவேகானந்தரை நாம் விரைவில் பார்க்கத்தான் போகிறோம். அவனின் விவேகமான சிந்தனைகளையும் படிக்கப்போகிறோம் அடுத்த நூல் வாயிலாக படிக்கப்போகிறோம் என்று தோன்றுகிறது எனக்கு!

எஸ்கேப் வேலைக்காரர்கள் மட்டும் படிக்க வேண்டிய நூல் இது அல்ல. ஈரமுள்ள,  ஈரம் உள்ள முதலாளிகள் கூடப் படிக்கலாம். அத்தனை வியாபர நுணுக்கங்கள் அடங்கிய ஒரு சிறிய ...சீரிய நூல்...!

தவறாது படியுங்கள். தவறின்றி வாழுங்கள். தடையின்றி வெல்லுங்கள்.
இந்த நூல் மூலம் அட்வான்ஸ் வாழ்த்து சொல்ல நீட்டுகிறேன் என் கரங்களை ..!

பணிவன்புடன்
Dr பாலசாண்டில்யன்



புத்தகத்தைப் படித்துவிட்டு, மகிழ்வுடன் மின்னஞ்சல் அனுப்பினார் நண்பர் பிரசன்ன வெங்கடேசன் . அந்த மடல்...


எஸ்கேப் - ஒரு மனக்கழுவி

அன்பு நண்பருக்கு,


தங்களுடைய தலைவா வா! போல, எஸ்கேப்-ம் ஒரு மகிழ்ச்சியான அனுபவம். திறனுக்கும், உழைப்புக்கும் ஒரு சல்யூட்..

எழுத்து நடை, எழுத்தாழம், கருத்தாழம் அற்புதமாக பளிச்சிடுகிறது. உங்களுடைய நோக்கம் எந்த இடத்திலும் பிறழாமல் பளிச்சிடுகிறது..

உங்கள் மனதுள் இருக்கும் ஒரு சினிமேடிக் கதாசிரியர் இந்த புத்தகம் முழுவதும் பரவி இருக்கிறார்.. படையப்பாவின் நீலாம்பரி கூட உங்கள் கதையில் நல்லவளாகிப்போகிறாள்.

எதார்த்தம் என்பது சற்று வேறு மாதிரி இருந்தாலும், controversial விஷயங்களை தவிர்த்ததும் ஒருவகையில் நல்லதுதான்.

கார்பரேட் ஊழலில் 16 வருடங்கள் இருந்து பழகிய என் பார்வையை ஒரு சராசரி வாசகனோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாதுதான்.

ஆனாலும் என்னிடம் வேலை செய்யும்போது இருந்த தவறான குணங்களும், அவை என் பதவி உயர்வுக்கு தடையாக இருந்ததையும் உணர முடிந்தது.

பெட் கல்சர், ஹீரோ ஒர்ஷிப், சுயநலப் பெருச்சாளிகள், ஒன்டே ஹீரோ, substandard leadership, தரமில்லாத பெர்பார்மென்ஸ், week hr system இப்படி பல நியூசன்ஸ்கள் கார்பரேட் உலகில் இருந்தாலும், அவற்றிற்கு ஒரே பாராவில் பதிலளித்தது சாமர்த்தியம்..

பாராட்டுக்கள்

அன்புடன்,
பிரசன்னா..



இந்த நிலையில்,எனது அடுத்த நூலை வெளியிட்ட மதி நிலையத்தாருக்கும், அன்புநிறை குருநாதர் பா.ராகவன் அவர்களுக்கும்,எப்பொழுதும் எனை ஊக்குவிக்கும் நண்பர்கள் கேபிள் சங்கர், கே.ஆர்.பி. செந்தில் ஆகியோருக்கும் நன்றி சொல்ல விழைகிறேன்
தனிப் பக்கத்தில் காண →
29 Aug 2013தத்துவம் மாதிரி

புறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..!


ஒருத்தர் , நமக்கு நேரா நம்மளை உயர்வா பேசிட்டு, அடுத்தவுங்ககிட்ட நம்மளைப்பத்தி இழிவா பேசுறது நமக்கு என்னிக்குமே பிடிக்காது. ஆனா அதை நம்ம பண்ணினா ரசிச்சு பண்ணுவோம். ஏன்னா புறம் சொல்றதுங்கறது நமக்குள்ள ஊறிப்போச்சு!

திருக்குர்ரான் சொல்லுது ! ஒருவனைப்பற்றி புறம் கூறுதல் தன்னுடைய சகோதரனுடைய மாமிசத்தை சாப்பிடுவதற்குச்சமம். !

அந்த அளவுக்கு அதில் என்ன கெடுதல் இருக்கமுடியும்?
இது சாதாரண விஷயமில்லை. நம்மை படுகுழில தள்ளிடும். புறம் கூறும் மனப்பான்மை உள்ளவுங்க வெற்றிக்கோட்டை தொடவே முடியாது.

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.

முகத்திற்கு முகம், இரக்கமே இல்லாமல், நாம் கடுஞ் சொற்களைக் கூறினாலும், கூறலாம். ஆனால், கண் எதிரே, ஆள் இல்லாத பொழுது, ஒருவரைப் பற்றி மட்டும், இழிவாகப் பேசுதல் கூடாதுன்னு வள்ளுவரே சொல்றார்.

மொக்கச்சாமி ஒரு விமானத்துல போய்க்கிட்டிருந்தார். அப்ப அவர் சீட்டுக்குப்பக்கத்துல, ஒருத்தர் சாதாரணமா உக்காந்திருந்தார். அவர்க்கிட்ட மொக்கச்சாமி மெதுவா பேச்சுக்குடுத்தார். இவரு தன்னைப்பத்தி ரொம்ப பெருமையா பீத்திக்கிட்டார். போகப்போக பக்கத்தில் உள்ளவர் வியக்கற மாதிரி நான் அப்படியாக்கும், இப்படியாக்கும்ன்னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சார். அவரும் பேசாம கேட்டுக்கிட்டிருந்தார். இந்த ப்ளைட்ட ஓட்டுற கேப்டன் கூட நம்ம பயதான்.! ரொம்ப நாளா என்னை கெஞ்சி கேட்டுக்கிட்டதால ஏறினேன். பஸ்ட் கிளாஸ்லதான் உக்காரணும்னு ஒரே அடம்.! நாந்தான் அதெல்லாம் வேணாம்ப்பா உனக்கு வேலை போயிடும்னு சொல்லி அடக்கிவச்சேன். பள்ளிக்கூடம் படிக்கிறப்ப 10 மார்க் கூட வாங்காத பயலெல்லாம் இன்னிக்கு கேப்டன்! அவனுக்கு சைக்கிளே சரியா ஓட்டத்தெரியாது! இப்ப ப்ளைட் ஓட்டுறான்னு அந்த விமானத்தோட கேப்டனை எல்லாம் வம்புக்கு இழுத்து பேசிக்கிட்டிருந்தாரு..அப்பன்னு பாத்து ஒரு ஏர் ஹோஸ்டஸ் வந்து, சார்..! ன்னாங்க! தன்னைத்தான் கூப்புடறார்ன்னு நினைச்சு, எஸ் ன்னாரு மொக்கச்சாமி! அவுங்க அவருக்கு பக்கத்துல இருக்குறவரைக்கூப்பிட்டு...சார் ! உங்க கேப்டன் ரூம் க்ளீன் பண்ணியாச்சு ! உங்க கேபினுக்கு போலாம் ன்னாங்க! அப்பதான் தெரிஞ்சுது! அவர்தான் அந்த விமானத்தோட கேப்டன்னு! கேப்டனும் மொக்கச்சாமிய மொறச்சு பாத்தாரு ! உடனே மொக்கச்சாமி அலட்டிக்காம அவர்க்கிட்ட சொன்னாரு! அடடா..! நான் ப்ளேன் மாறி ஏறிட்டேன் போல!
என்ன ஒரு சமாளிபிகேஷன்

இந்த மாதிரி ஆட்களை நீங்க எல்லாருமே சந்திச்சிருப்பீங்க! இதுக்கான அடிப்படைக்காரணம், தன்னைப்பத்தி புகழ்ந்துக்க விஷயமில்லாதபோது, அடுத்தவங்களைப்பத்தி இகழ்ந்தா சந்தோஷமா இருக்குறதுதான் காரணம்! அது மூலமா.. நான் ரொம்ப நல்லவன்னு சொல்லி அடுத்தவரைக் கவரும் முயற்சி! ஆனா அதோட முடிவு தோல்விதான்கிறதுதான் சோகமான விஷயம்!

ஒருவர் இருக்கும்போது அவரைப்பத்தி என்ன பேசுவோமோ அதையே அவர் இல்லாதபோதும் பேசிட்டா பிரச்னையே இல்லை! ஏன்னா இல்லாதபோது பேசின குறை, அவருக்கு தெரியவரும் புள்ளியில்தான் நாம் சக மனிதனின் நம்பிக்கையை நமக்கே தெரியாமல் இழக்க ஆரம்பிக்கிறோம்
பெரிய பெரிய நிறுவனங்கள்ல எல்லாம், எவ்வளவு பெரிய திறமைசாலியா இருந்தாலும், இந்த மாதிரி புறம் சொல்லும் குணமுள்ளவுங்களை வெளில அனுப்பிடுவாங்க..! ஏன்னா புறம் கூறும் நபர்களாலத்தான் ஒரு நல்ல நிறுவனம் அழிஞ்சு போகும்ன்னு அவுங்களுக்கு தெரியும்.

பாட்சா படத்துல தேவன் நக்மாவோட அப்பாவா வருவாரு! அவர்தான் பாட்சாவான ரஜினிக்கிட்ட நல்லவர் மாதிரி நடிச்சு, அவரைப்பத்தி ரகுவரன்கிட்ட புறம் சொல்லி ஏமாத்தப்பாப்பாரு! அதைக்கண்டுபிடிச்சு ரஜினி தப்பிச்சுடுவாரு...அதே சமயம் கூட இருந்தே ஏமாத்தின தேவன் தான் தன் குடும்பத்தை கொன்னதுன்னு தெரிய வ்ந்ததும் ரகுவரனே , தேடிவந்து தேவனை கொன்னுடுவாரு! இதுதான் புறம் கூறுபவர்களோட நிலமை!

இந்த குணத்தை விரட்ட , முடிஞ்சவரைக்கும் ,அடுத்தவுங்களை குறை சொல்லாம இருக்கலாம். அப்படி சொல்றதா இருந்தா அவுங்க முன்னாடியே சொல்லிடலாம். அதை விட்டுட்டு, கோழைத்தனமா பின்னாடி போய் அவுங்களைப்பத்தி சொன்னா, அதை ரகசியமாவே சொன்னாலும் அது ஒரு நாள் வெளில வந்து நமக்கு அவமானமா போயிடும்.

வெளிவராமல் போன ஜக்குபாய் பட போஸ்டரில் ஒரு வாசகம் இருக்கும்...இறைவா! நண்பர்களிடமிருந்து என்னைக்காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்! இதைவிட அழகா புறம் கூறும் நண்பர்கள் பத்தி எப்படி சொல்லமுடியும்?

ஏன்னா நமக்காக பிறரைப்பத்தி குறை சொல்பவர்கள் ! பிறருக்காக நம்மைப்பற்றியும் கட்டாயம் குறை கூறுவார்கள். இந்த நினைப்பு எப்பவும் இருந்தா போதும். நாமும் அடுத்தவுங்களைப்பத்தி பின்னால் பேசமாட்டோம். அடுத்தவுங்களும் நம்மகிட்ட பிறரைப்பத்தி சொல்ல பயப்படுவாங்க!
அதையும் மீறி சொன்னா ஒரே ஒரு தடவை இப்படி சொல்லிப்பாருங்க! " இப்படித்தானே மத்தவுங்ககிட்ட என்னப்பத்தி சொல்லுவீங்க"? அதுக்கப்புறம் புறம்கூறும் வாசனையே உங்க பக்கம் அடிக்காது.

எல்லாரையும் அகம் மகிழ பாராட்டி பழகிட்டா புறத்துக்கு வேலையே இருக்காது.

இப்ப புறம் மட்டுமில்ல..அகம் மகிழ்ந்தும் கூறுகிறேன். வாழ்த்துக்கள்!


நீங்கதான் சாவி - புத்தகத்திலிருந்து...!!





தனிப் பக்கத்தில் காண →