சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
22 Nov 2015நடப்பு

சென்னைப் பிழை!


 பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை விட
பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் ஆபத்து !!
அப்படியொன்றும் செய்துவிடமுடியாது என்று அறைந்துவிட்டுச் செல்கிறது இயற்கை!





சென்னை வெள்ளக்காடாகிவிட்டது என்று எல்லா இடங்களிலும் புலம்பி, அலம்பி , சலம்பித் தீர்த்துவருகிறோம். எவ்வளவுதான் மூட்டை மூட்டையாக எழுதினாலும் தண்ணீரை அடைக்கவோ, வடிக்கவோ அது போதுமானதாக இல்லை. அவ்வளவு எழுத்தும் மண்ணாக இருந்தால்கூட ஏதாவது சாத்தியப்பட்டிருக்கும்.

இந்த சூழலில், நமக்கு மொத்தமாக இருக்கும் ஆத்திரம், ஆதங்கம், வருத்தம், கோபம், ஆற்றாமை, எல்லாவற்றையும் திட்டி பதிவு போட்டோ, சென்னையை கேவலமாகக் கிண்டல் அடித்தோ வடித்துக்கொள்கிறோம்.

ஆனால், ஒரு நிதர்சனமான உண்மைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டுதான் இத்தனையும் செய்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

நாம் யாருமே சென்னையை நேசிக்கவில்லை.. சும்மா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஊரில், மழை பெய்தால் இப்படித்தான் வெள்ளமாகும். உடனே அப்பா ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுவார், எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் வாய்க்காலை வெட்டிவிடுவார். எங்கள் வீட்டில் தண்ணீர் தங்காமல் காண்வாய்க்கால் வழியாக வழிந்து ஓடுகிறதா என்று பார்ப்பார். பிறகு பக்கத்துவிட்டு அண்ணனும் வெளியில் வந்திருப்பார். அவரும் அதையே செய்ய.. மொத்தத் தெருவின் தண்ணீரும் பெத்தாரி என்றழைக்கப்பட்ட பெத்த ஏரிக்குச் சென்றுவிடும். நாங்கள் அந்த வாய்க்கால் நீரில் கப்பல் விடுவோம். மிதந்துவரும் இலைகளை வேடிக்கை பார்ப்போம். அப்போதுகூட சிறுவர்களுக்கு ஒரு வேலை கொடுப்பார்கள். அதில் செத்தைகள் மெதந்துவந்தா எடுத்து வெளில போடுங்கடா... !!  சந்தோஷமாக அதைச் செய்வோம். ஊரில் வேறு எங்காவது தண்ணீர் தேங்குகிறது , உடைப்பு என்று தெரிந்தால்.. மொத்தக்கூட்டமும் ஓடும்.

தங்களால் முடிந்த ஏதாவது ஒன்றைச் செய்து உடைப்பை அடைத்துவிடும். 84ல் ஏற்பட்ட வெள்ளத்தில், நரியாற்றுப்பாலம் உடைந்தபோது.. மக்களே ஒரு ஏற்பாட்டை உருவாக்கினார்கள். கரைக்கு அந்தப்பக்கம் வரை எம்.ஜி.ஆர் வந்துசென்றது மசமசவென்று நினைவாடுகிறது.

எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் இல்லாதபோது ஏதாவது ஒன்று செய்து கிராமத்தைக் காக்கவேண்டும் என்று அவர்கள் நினைத்ததற்குக் காரணம்... தான் வாழும் மண்ணை நேசித்தார்கள்.
 
ஊருக்குள் ஒருவர் வீட்டில் பிரச்னை என்றால் ஓடிப்போய் உதவினார்கள்.
ஒரு வீட்டில் தீப்பிடித்தது என்றால்... ஆளுக்கொரு வாளி நீருடன் ஓடினார்கள்.


இங்கு?

இதோ பாருங்கள்.. பாதாளச்சாக்கடை திறந்திருக்கிறது என்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில் இறங்கி மூட மனமில்லை!

சென்னைவாசிகள் என்றுதான் நம்மில் பலருக்கு உபபெயர்!  சென்னைக்காரர்கள் என்று இல்லை!! 
சந்தித்து மூன்றாவது நிமிடம்.. நமக்கு சொந்த ஊரு எது? என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ”எங்க ஊர்ல எல்லாம் இப்படி இல்லை” என்று பல முறை சொல்லி வருகிறோம். அப்படியானால், இந்த ஊர்?
 
இந்த மண்ணின் மீது மனதளவில் அந்நியப்பட்டு, இங்கிருக்கும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தவேண்டும். ஆனால், அதற்கு எதுவும் நம்மால் ஆனதைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

சாதாரணமாக, ஒரு சாலை விபத்து நடந்தால்கூட ஓடிவந்து காப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான்.  சென்னைவாசியாக இருக்காது!

டிராஃபிக் ஜாம் ஆனால், வழி ஏற்படுத்திக் கொடுப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான். சென்னை வாசி.. ஹாரன் அடித்துக்கொண்டிருப்பான்.!

இந்த தண்ணீர் தேசமாகிவிட்ட நிலையில், அறைக்குள் அமர்ந்துகொண்டு, இந்தியாவின் வெனிஸ்... !! என்று வியாக்கியானமாக எழுதுபவன் சென்னைவாசியாகத்தான் இருப்பான்!
தெருவில் இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருப்பான் சென்னைக்காரன் !

சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 8% பேர்தான் சென்னைக்காரர்கள் !! 92% பேர் சென்னைவாசிகள்தான் !! வந்தேறிகளான நாம் வந்துதான் இந்த நகரம் இவ்வளவு வளர்ந்தது என்று பிரமாதமாக வாதிட்டாலும், இவ்வளவு மோசமானதும் நம்மால்தான் என்பதை கொஞ்சம் கண்ணாடி பார்த்து ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இது சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரம் !!  இங்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவலத்துக்கு நாமும் ஒரு காரணம்.. இல்லை. நாம்தான் முதல் காரணம் என்று  உணர்ந்துகொள்வோம்.

ஏரியாக இருந்தால் என்ன? அதெல்லாம் பில்டர் காசுகொடுத்து அப்ரூவல் வாங்கியிருப்பார். அதனால், எப்படியாவது வீடுவாங்கவேண்டும் என்றோ, என் வீட்டு முன்னால், தண்ணீர் தேங்காமல் இருக்க மொத்தமாக சிமெண்ட் போட்டு பூசுவேன் என்றோ, குப்பையை யாருக்கும் தெரியாமல், ரோட்டில் கொட்ட நினைக்காமல், இந்த அவலமான காலகட்டத்தை முழுமையாக மனதில் வைத்துச் செயல்படுவோம். 

நாம், இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால், அக்கறை அதிகமான மனிதர்கள் இந்த நகரத்தில் இருப்பதை, அரசும் புரிந்துகொண்டு, அதற்கேற்றார்ப்போல் செயல்படும்.

இங்கு புலம்புபவர்கள்தான் அதிகம்! ஆனால்,  புரிந்து செயல்படுபவர்கள்தான் தேவை!

இந்த நகரத்தை நம்பித்தான், நாம் வந்திருக்கிறோம். இந்த நகரத்தை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறோம். ஆனால், நாந்தான் வரி கட்டுறேனே?.. நகரத்தின் தேவைகளையெல்லாம் அரசுதான் செய்யவேண்டும் என்று பேசுவதற்கு முன்னால் , நாம் வாழும் பகுதியில் இதுபோன்ற இடர் நிகழாமல் இருக்க, என்ன முயற்சி எடுத்தோம் என்று கொஞ்சம் சிந்திக்கலாம். அப்புறம் அப்படிச் சிந்திப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசைக் கேள்வி கேட்கலாம். அப்போது சரியான பதில் கிடைக்கும்.

சென்னை ஒரு அற்புதமான நகரம்..!! அதைச் சிதைத்துவிட்டு.. அதைக்குறை சொல்வது மிகவும் வலி ஏற்படுத்துகிறது.

வாழ்ந்துகெட்ட மாளிகைக்குள் வந்ததைப்போல் உறுத்துகிறது.

இனியாவது நம்மால் இப்படி ஒரு அநியாயம் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம்.

இந்த ஊரை நேசிப்போம்.  சென்னை வாசி என்பதிலிருந்து.. சென்னைக்காரனாக முடிவெடுப்போம்!


பின் குறிப்பு : இவ்வளவு எழுதுறியே ? நீ என்ன செஞ்ச ? என்று நினைப்பவர்களுக்காக ....

இதை உணர்ந்ததால், ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, எங்கள் பகுதி மாநகராட்சி உறுப்பினரைத் தொடர்பு கொண்டு, பிரச்னை உள்ள பகுதி மனிதர்களை ஒருங்கிணைத்து, தேவைப்பட்ட உதவிகளைச் செய்துகொண்டு, அவர்களுக்கு ஏதாவது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு,  நான் வசிக்கும் கட்டிடத்திலும் முடிந்தவரை தண்ணீர் வெளியேற வழிசெய்துவிட்டுத்தான் எழுதுகிறேன்.
நன்றி !

தனிப் பக்கத்தில் காண →
17 Nov 2015புத்தகம்

புதிய நூல்.. !

பொறியியல் தவிர கலை மற்றும் அறிவியலில் ஏராளமான படிப்புகள் உள்ளன. அதனைப் படிப்பவர்களுக்கு அதைவிட ஏராளமான வேலை வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அவற்றை முறையாகச் சொல்ல ஒரு நூல் இல்லை என்று ஒரு கல்லூரி முதல்வர் பேசிக்கொண்டிருந்தார்.  ஏன் நாமே அதனை முயற்சிக்கக்கூடாது என்று எண்ணியதன் விளைவு..

கொஞ்சம் நேர முதலீடு,
பல வல்லுனர்களின் சந்திப்புகள்
பல கல்வியாளர்களின் உள்ளீடு

இவற்றை வைத்துக்கொண்டு ஒரு நூலை எழுதினேன். ( டைப்பினேன்)

பின்னர் பதிப்பித்து, வெளிப்படுத்துவதை விட, மின்னூலாக வெளியிட்டால் என்ன என்று எண்ணியதன் விளைவு :
இதோ ..
இணைப்பு


https://gumroad.com/l/doQz#
தனிப் பக்கத்தில் காண →
27 Sep 2015அனுபவம்

மதுரை சம்பவம் !








 
ஒரு தனியார் நிறுவனத்தின் மாநில அளவிலுள்ள நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்.!! மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு, தேதி, இடம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி ! 

        ஒப்புக்கொண்டபடி நானும் நேற்று மதுரைக்குச் சென்றுவிட்டேன். பத்து மணிமுதல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு என் நிகழ்ச்சி 11 மணிக்குத் துவங்கவேண்டும். நானும் அங்கு சென்றடைந்துவிட, அந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள நிறுத்துமிடத்தில், காரை வைத்துக்கொண்டு 20 நிமிடங்களுக்கும் மேல் காத்திருந்தோம். நிறுவன முக்கிய அதிகாரியும் என்னுடன் அமர்ந்திருந்தார். இடையில் ஃபோன் வர, வெளியில் சென்று பேசிவிட்டு வந்து அமர்ந்தார். அவர் முகத்தில் கவலை ரேகை..!! ஏன் என்ன ஆச்சு? என்று கேட்டால்,

“ஒரு சின்ன பிரச்னை சார்!”

என்ன?

ஸ்டாலின் மதுரை வந்திருக்காரு.. ! அவரோட நிகழ்ச்சிக்காக அவர் இந்த மண்டபத்தில் உள்ள இன்னொரு ஹாலை புக் பண்ணியிருக்காங்க! இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாராம். அதனால, நம்ம நிகழ்ச்சியை நிறுத்திவைச்சுட்டு, அவர் வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் நம்மளை நடத்திக்கச் சொல்றாங்க! ஏற்கனவே நமக்குக் கொடுத்திருந்த மைக்கெல்லாம் எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க!

ரெண்டும் ஒரே ஹாலா?

இல்லை சார்.. ரெண்டு ஹாலுக்கும் சம்பந்தமே இல்லை.. தனித்தனி வராண்டா, தனித்தனி வாசல்!

அப்புறம் ஏன் நிறுத்தச் சொல்றாங்க!

அவங்களுக்கு நம் நிகழ்ச்சி இடைஞ்சலா இருக்குமாம். நம்ம எல்லாரையும் வெளில போய்ட்டு அவர் வந்துட்டுப் போனதுக்கப்புறம் வரச்சொல்றாங்க!

ஓ...அவர் எப்ப வராரு?

தெரியலை!

எவ்வளவு நேரம் அவங்க நிகழ்ச்சி?

அதுவும் தெரியலை!

நமக்கு எத்தனை மணி வரைக்கும் நேரம் இருக்கு..?

நாம 5 மணிக்கு மண்டபத்தை காலி பண்ணனும்.!

இப்ப என்ன பண்ணியிருக்கீங்க?

11:30க்கு விடவேண்டிய டீ ப்ரேக்கை இப்பவே விட்டாச்சு ! என்ன பண்றதுன்னு தெரியாம , உங்ககிட்டயும் சொல்லமுடியாம .....பேசிக்கிட்டிருந்தோம்.!

நம்மளை நிறுத்தச்சொல்லி நிர்ப்பந்திக்கிறது யாரு?

திமுக நிர்வாகிகளும், இந்த மண்டப மேனேஜரும்... !!

மிகவும் அநியாயமாகப் பட்டது..!! திமுகவினர், தங்கள் நிகழ்ச்சிக்காக, ஏற்கனவே திட்டமிடப்பட்டு, மூடப்பட்ட தனி அரங்கத்தில் நடத்தப்படும் தனியாரின் நிகழ்ச்சியின் மீது தங்கள் அதிகாரத்தை நீட்டிக்கிறார்கள் என்றால், அது மக்கள்விரோதப்போக்காகப் பட்டது.!

உடனே, அந்த அரங்கத்தின் பொறுப்பாளருக்கும், எங்கள் நிகழ்ச்சியை நிறுத்தச்சொன்ன திமுக நிர்வாகிகளுக்கும் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ளச் செய்தேன். “கேட்டால் கிடைக்கும்” என்று மீண்டும் நிரூபித்தோம். அது, அங்கு நமக்கு நாமே வாக வேலை செய்தது !! பிரச்னை முடிந்தது ! எங்களுக்கு விடிந்தது!

பிறகு, எங்கள் நிகழ்ச்சி தடையின்றி நடந்தது !!

இதுதான் NEWS... இனி எனது VIEWS...

இதில்.. ஒரு சாமானியனாக ,என் வருத்தமும் ஆதங்கமும், கோபமும் வெளிப்பட வேண்டியிருக்கிறது...

1 ஒரு தனியார் நிறுவனம், தங்கள் செலவில், மாநில அளவில் உள்ள நிர்வாகிகளை பயணிக்க வைத்து, முன்னரே திட்டமிட்டு, பயிற்சியாளரை சென்னையிலிருந்து வரவழைத்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், ஒரு தமிழகக் கட்சி.... அதுவும் எதிர்க்கட்சியாகக்கூட இல்லை.. ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம் அதிகமாகச் செய்யும் கட்சி என்று பெயர் எடுத்திருப்பவர்கள், அதனாலேயே மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள்..மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவேண்டும் என்று அந்தக் கட்சியின் பொருளாளர், மாநிலம் முழுவதும் மக்களோடு மக்களாக கலந்து பழகுகிறார் என்று பிம்பம் ஏற்படுத்துபவர்கள், தங்கள் நிகழ்ச்சிக்காக.. மாநிலம் முழுவதிலிருந்து வந்திருக்கும் 90 நபர்களை துன்பப்படுத்தினார்கள் என்றால், இந்த ஒற்றை நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் அந்த குறிப்பிட்ட நபர்கள் மூலம் பரவும் என்பது தெரியாமலா இருந்திருக்கும்?

2. ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவே இல்லை என்றால் பரவாயில்லை. நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் சொல்லும்வரை நிறுத்தவேண்டும் என்று இப்போதே அதிகார துஷ்பிரயோகம் செய்தால், உங்களிடம் அதிகாரத்தைக் கொடுக்கவே கூடாது என்று மக்கள் நினைப்பது உண்மையாகிவிடுமே? எந்த அரசு அதிகாரமும் இல்லாதபோதே, ஒரு நிகழ்ச்சிக்குள் தங்கள் எல்லையை நீட்டிக்கும் கட்சியின் மீது எப்படி நம்பிக்கை வைப்பது?

3. நிகழ்ச்சிக்காக வைத்திருந்த மைக்கையெல்லாம் நிர்வாகத்தின் மூலமாக பறித்துச்சென்றது எந்த விதத்தில் நியாயம்..? தங்கள் கட்சி நிகழ்ச்சி நடந்தால், அந்தப்பகுதியில் வேறு எந்த சத்தமும் வரக்கூடாது என்று நினைப்பது என்ன விதமான ஜனநாயகம்?

4.அவர் எத்தனை மணிக்கு வருவார், நிகழ்ச்சியின் கால அளவு எதுவுமே சரியாகத் தெரியாதபோது, ஒரு நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியை, தங்கள் இஷ்டத்துக்கு வளைப்பது என்பது தர்மமே இல்லை! 

5.ஏதோ, கொஞ்சம் பேச முடிந்த, பேசத்தெரிந்த என் போன்றவர்கள், அவர்களுக்கு உண்மையை எடுத்துச்சொன்னதால், இருபக்கமும் பிரச்னையின்றி நிகழ்த்த முடிந்தது. இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்? நான் சென்ற நிகழ்ச்சியாளர்கள்...பயந்துபோய் , தங்கள் நிகழ்ச்சியை நிறுத்தி வைத்து, திட்டமிட்டபடி நடக்காமல், ஏனோதானோவென்று நடத்திவிட்டுச் சென்றிருப்பார்கள்.

6. இதுவே, திமுகவினருக்கு பயந்து, நிகழ்ச்சி நின்று போயிருந்தால்,..? அதுவே ஒரு ஆளும்கட்சி குடும்பத்தின் விழாவாக இருந்திருந்தால் ? ஒரு திமுக நிர்வாகி வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்..? அஞ்சாநெஞ்சன் நடத்தும் விழாவாக இருந்திருந்தால்..? அரசு நிகழ்ச்சியாக இருந்திருந்தால்...?

7. இதுதான் உங்கள் நமக்கு நாமேவா? அதாவது நம் கட்சி மட்டும்தான் இருக்கவேண்டும்,, வேறு யாரையும் அந்தப் பகுதியில் இருக்க விடக்கூடாது. அதற்கு நாமே உதவிக்கொள்ளவேண்டும் என்று அர்த்தமா? இது போன்று நீங்கள் செய்வது உங்களுக்கு ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று புரிகிறதா? இப்படியெல்லாம் செய்தால், உங்கள் கட்சித் தலைமை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும் என்று தெரிகிறதா? என்று கேட்கவைத்தேன். நேரடியாகச் சண்டை போட்டிருந்தால், நிச்சயம் தங்கள் பலத்தை அவர்கள் காட்டியிருப்பார்கள்.

8. மக்களை நேரடியாகச் சந்திக்கிறேன் என்று மாநிலம் முழுதும் பயணம் செய்கிறார் திரு. ஸ்டாலின் அவர்கள். ஆனால், ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று அராஜகங்களை அவரது கட்சிக்காரர்கள் அரங்கேற்றுகிறார்கள் என்ற தகவல் அவருக்குத் தெரியுமா? அப்படித் தெரிந்து செய்ய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இதற்குப் பிறகு அவருக்குத் தெரியவந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு, மக்கள் வெறுப்பை நேரடியாகச் சம்பாதிக்காமல் இருப்பது உத்தமம்! அவரால் , அவர்களைக் கட்டுப்படுத்தமுடிந்தாலே போதும் !!

9.ஏன் திமுகவை மக்கள் தள்ளிவைக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இதுபோன்ற நிகழ்வுகள்தான்! ஒரு தனி மனிதனாக, அடிபடும்போதுதான் இது ஆதங்கமாக வெளிப்படுகிறது.

ஒரு பிரச்னை.. அதுவும் சுமுகமாக முடிந்துவிட்டது. பின் ஏன் வெளியில் சொல்லவேண்டும் என்று கேட்பவர்களுக்கு : 

அது ஒரு தனி மனிதர் செய்திருந்தால், நிச்சயமாக வெளியில் சொல்லியிருக்கமாட்டேன். அது ஒரு நிறுவனம்.! கட்சி! அதில் ஒவ்வொரு தொண்டனுக்கும் இப்படி நினைப்பிருந்தால், மாற்றிக்கொள்ளலாம். ஏதோ தாங்கள் ஆட்சிக்கே வந்துவிட்டதுபோல் மமதை வருவதைத் தவிர்க்கலாம். அதற்குத்தான்! அப்படியானால்.. ஆட்சிக்கு வந்துவிட்டால், என்னவெல்லாம் செய்வார்களோ என்ற முன்னோட்ட பயத்தை ஏற்படுத்தாமலிருக்கலாம்.

என் அரசியல் சார்பு பற்றியோ .... அந்தக் கட்சி இப்படிச்செய்யவில்லையா? இந்தக்கட்சி அப்படிச் செய்யவில்லையா என்று கேட்பவர்களுக்கு :

இந்தச் சம்பவத்தில் எனக்குத் தொடர்பிருக்கிறது. பேசினேன். அதற்கு மட்டும் விளக்கம் போதும். வேறு ஒரு சம்பவம் நடந்தால், அதுபற்றி அதற்குத் தொடர்பானவர்களுடன் பேசவும்! மேலும் இப்படிக் கேட்பதுதான் திமுகவின் பலவீனம் என்ற மக்கள் பேச்சு உண்மையாகிவிடும்.

திமுகவினருக்கு:
இதில் ஹிட் ஃபார்முலா ஒன்று இருக்கிறது. அந்த நிறுவன நிகழ்ச்சி, அருகில் இருப்பதை அறிந்துகொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு, திரு.ஸ்டாலின் அவர்களைத் தலைகாட்டச் சொல்லி, 30 மாவட்ட தனி நபர்களின் நல்லெண்ணத்தை ஒரே நிமிடத்தில் பெறச்செய்வது! அதுதான் உண்மையான மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கான வெற்றி.. நான் ஆலோசகனாக இருந்திருந்தால்.. அதைத்தான் செய்திருப்பேன்..!! 

எனக்குப் பரிந்து பேசுவதாக எண்ணி, தங்கள் சார்பை நிலைநாட்ட எண்ணுபவர்களுக்கு:

இங்கு அதுபோன்ற சாயங்கள் வேண்டாம். இதில்.. எந்த தனிமனித வெறுப்போ, காழ்ப்புணர்ச்சியோ, கட்சி மீதான தனிப்பட்ட பார்வையோ கிடையாது. ஒரு சம்பவம்.. அதில் என் உணர்வுகள்.. அதன் பதிவு அவ்வளவே.. இனி நான் இதனைத் தூக்கிச் சுமக்கப்போவதில்லை..



நன்றி!
தனிப் பக்கத்தில் காண →
14 Sep 2015நேர்முக்கியத் தேர்வு தொடர்

நேர் முக்கியத் தேர்வு – பாகம் 3


பட்டப்படிப்பு முடிக்கும்போது இறுதி ஆண்டின் இறுதிக் கட்டத்தில், கல்லூரியிலேயே வளாக நேர்முகத் தேர்வு (CAMPUS INTERVIEW) நடப்பது இப்போது பெருகிவிட்டது. அப்படி நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்போதே, அனைத்து இறுதியாண்டு இளைஞர்களிடமும் ‘அவரவர் ரெஸ்யூமை ரெடி பண்ணிக்குங்க’ என்றிருப்பார்கள். உடனே அரக்கப்பரக்க, ஒருவர் தயாரித்த ரெஸ்யூமுக்கு, டிங்கரிங் பார்த்து, பெயிண்ட்டை மாற்றி அடித்து – அதாவது- பெயர், சொந்தவிபரங்களை மட்டும் மாற்றி, ஒரு ரெஸ்யூமே தயாரித்து அதனைக் கல்லூரிக்கு எடுத்துச் செல்வதுதான் இன்று பொதுவான வழக்கமாகப் போய்விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், யாருடைய ரெஸ்யூமே காப்பியடிக்கப்பட்டதோ, அவரை விட மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக மற்றவர்கள் தயாரித்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு விடுவார்கள். ஒரிஜினல் ஓனர், ஓரங்கட்டப்படுவார்.
      இப்படியாக தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமேகளை வளாக நேர்முகத்தேர்வில் பயன்படுத்திவிட்டு, அதில் தேர்வு செய்யப்படாமல், வெளியில் வேலை தேடும் நிலை வந்தால், அதே ரெஸ்யூமில், கடைசி செமஸ்டரின் மதிப்பெண்களை மட்டும் சேர்த்துக்கொண்டு, புதிதாக பிரிண்ட் எடுக்கத் துவங்குவார்கள். ரெஸ்யூமேகளை பிரிண்ட் எடுப்பதில் இரண்டுவகை திறமையாளர்கள் உண்டு !
      ஒருவர், நேர்முகத்தேர்வு அன்று காலை, ஒவ்வொரு இண்ட்டெர்நெட் பிரவுசிங் செண்ட்டராகத் தேடி, அவசர அவசரமாக ஒரு பிரிண்ட் எடுத்துக்கொண்டு செல்பவர்.
      இன்னொருவர், தான் வாழ்நாளில் கலந்துகொள்ளப்போகும் அனைத்து நேர்முகத்தேர்வுக்கும் மொத்தமாக 50 பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளும் முன் ஜாக்கிரதை முகேஷ் !
      இதில் இரண்டுபேருமே, கொஞ்சம் தங்களைச் சரி செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
      முதலில், ரெஸ்யூமே எப்படித் தயாரிக்கவேண்டும் என்று தெரிந்துகொள்வது. அப்படித் தெரியவில்லையென்றால், இந்தக் கட்டுரையின் முந்தைய பாகங்களைப் படித்துப் பார்த்து அறிந்துகொள்வது. பின்னர்.. அதனை எத்தனை பிரிண்ட்டுகள் போடுவது என்று முடிவெடுப்பது.
      வேலைக்கான இண்டர்வ்யூ தினத்தில் , ரெஸ்யூமை பிரிண்ட் போடுவது, நமது மெத்தனத்தைக் காட்டுகிறது.
ரெஸ்யூமேகளை மொத்தமாக 50 பிரிண்ட் எடுத்துவைத்துக்கொண்டு சுண்டல் போல் விநியோகம் செய்வது அதைவிடக் கொடுமை.! முதல் வேலையே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு தன்னம்பிக்கை இருப்பவர்களாகத்தான் நாம் வளரவேண்டும். அப்படியானால், எத்தனை பிரதிகள் ரெஸ்யூமே வைத்துக்கொள்ளலாம்.?
அதிகபட்சம் 5 பிரதிகள் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஏனெனில் அதில். இடைப்பட்ட காலத்தில் படித்த ஒரு டிப்ளமோவைச் சேர்க்கலாம். திருத்தலாம். மாற்றங்கள் ஏற்படுத்தும்போது  இரண்டு மூன்று ரெஸ்யூமே தாள்கள்தான் வீணாகும். ஆனால் மொத்தமாக வைத்துக்கொள்ளும்போது , நம் ரெஸ்யூமே ஒருபக்கக் குறிப்பு நோட்டாவதை (One side rough note) தவிர்க்கமுடியாது.
      பொதுவாக, பல்வேறு நிறுவனங்கள் தங்கள் மின்னஞ்சலுக்கு ரெஸ்யூமை அனுப்பச் சொல்லி கேட்பார்கள். அப்படிக் கேட்கும்போது, ஒரு முறைக்கு இரண்டுமுறை படித்துப்பார்த்து, தவறுகளைச் சரிசெய்து அனுப்புவதுதான் சாலச் சிறந்தது.
      அய்யா… இத்துடன் எனது ரெஸ்யூமை இணைத்திருக்கிறேன். தகுந்த வேலைக்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
      என்று நல்ல பிள்ளையாக, தன்மையாக மெயில் டைப் செய்துவிட்டு, ரெஸ்யூமை அட்டாச் செய்ய மறந்துபோகும் அறிவுக் கொழுந்துகளாக சிலர் இருப்பார்கள். ஒரு அழகான கடிதம் எழுதி, அதனை உள்ளே வைக்காமல், வெறும் கவரை மட்டும் அனுப்புவதைப் போன்ற தவறு அது !! 
ஆனால், நிறுவனங்கள் - நம் ஆள், மீண்டும் ரெஸ்யூமை அட்டாச் செய்தால் கூட- உடனடியாக நிராகரித்துவிடும். ஏனெனில், தன் ரெஸ்யூமைக்கூட அட்டாச் செய்யாமல் அனுப்பும் அளவுக்கு கவனக்குறைவான ஆளை அவர்கள் வேலைக்குத் தேர்ந்தெடுக்க விரும்பமாட்டார்கள்.
ஆக, நேராகப் போய், சந்திக்கும்போதுதான் நேர்முகத்தேர்வு நடக்கவேண்டும் என்று இல்லை. அந்த நிறுவனத்துடன், நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தகவல் தொடர்பிலிருந்தே நமது தேர்வு துவங்குகிறது.
அவர்களுடன் நாம் இரண்டு விதங்களில்தான் தொடர்பு கொள்ளுவோம். ஒன்று மின்னஞ்சல், இரண்டாவது நேராகச் செல்வது. இந்தக் காலகட்டத்தில், முதல் வேலைக்கு நிறுவனத்தை அணுகுபவர்கள் பொதுவாக கடிதப்போக்குவரத்து மேற்கொள்வதில்லை.
அப்படி , தகவல் தொடர்பில் முதலாவதாக விளங்கும் மின்னஞ்சல் அனுப்ப நமக்கு ஒரு மெயில் ஐடி எனப்படும் மின்னஞ்சல் முகவரி வேண்டும். ஆனால், அதுவே நம் வேலைத் தகுதியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு முக்கியமானது.
மெயில் ஐடியில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக ஒரு புள்ளிவிபரம். உலகளாவிய வகையில் 86% நிறுவனங்கள் மின்னஞ்சல் முகவரியை வைத்து விண்ணப்பதாரரை எடைபோடும் பாணியைப் பின்பற்றுகின்றன. அதாவது, ஒரு தனிமனிதனின் குணாதிசயத்தை அவரது பெயரை வைத்து எடைபோட முடியாது. ஏனெனில், அந்தப்பெயர் அவரது பெற்றோர்கள் வைத்தது. மேலும் அவர் குழந்தையாக இருக்கும்போது வைத்தது. ஆனால், மின்னஞ்சல் முகவரியை மட்டும் தனக்குத்தானே வைத்துக்கொள்கிறோம். அப்படி நமக்கு நாமே திட்டத்தில் வைத்துக்கொள்ளும் மின்னஞ்சல் முகவரி. நமது குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்பது நிறுவனங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.!
உதாரணமாக கோபு என்ற புதிய மனிதரை ஒரு கூட்டத்தில் சந்திக்கிறீர்கள். பேசுகிறீர்கள். பின்னர் விலகும்போது, மின்னஞ்சல் பரிமாறிக்கொள்கிறீர்கள். அப்போது அவர் மின்னஞ்சல் முகவரியைச் சொல்கிறார். அது GUJAAL_GOPU@GMAIL.COM என்று இருக்கிறது. உடனே அவரைப்பற்றி நமக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும் ?
நிறுவனங்களுக்கும் நமது வேடிக்கையான மின்னஞ்சல் முகவரிகளைப்பார்த்து அதே அபிப்பிராயம்தான் ஏற்படும்.
இங்கே சில மின்னஞ்சல் உதாரணங்களைப்பார்ப்போம்.
anushka_fan_anand@yahoo.com – இவர் வேலையை விட, அனுஷ்காவைத்தான் அதிகம் நேசிப்பார் என்பதை நிறுவனத்துக்குச் சொல்லுகிறார்.
Sweetlittlebabybanu@rediff.com  - இவ்வளவு சின்னக்குழந்தையான பானுவை வேலைக்குச் சேர்த்தால், குழந்தைத் தொழிலாளர் சட்டம் பாயும் என்ற பயம் நிறுவனத்துக்கு ஏற்படும்.
pulsarpandian@gmail.com – பைக் மட்டும் ஓட்டிக்கொண்டிருக்கட்டும் என்று நிறுவனம் விட்டுவிடும்.
Ilovejothi_martin@hotmail.com இவர் ஜோதிக்குத்தான் சரியாக வருவார் என்று நிறுவனம் நிராகரித்துவிடும்.
மேற்கண்ட முகவரிகள் அனைத்தும் கற்பனையே.. அந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்துபார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். சில நேரங்களில், உண்மையிலேயே அத்தகைய முகவரிகள் இருந்தால், அவர்கள் பாவம். தான் செய்தது என்னவென்று தெரியாமல் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விட்டுவிடலாம்.
மின்னஞ்சல் முகவரி எப்படி இருக்கக்கூடாது என்று பார்த்தோம். அப்படியானால், இமெயில் ஐடி எப்படி இருக்கவேண்டும்.?




தனிப் பக்கத்தில் காண →
28 Aug 2015நேர்முக்கியத் தேர்வு தொடர்

சுயமான விபரம் - நேர்முக்கியத்தேர்வு: 2

பொதுவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வோம். அல்லது வேலை பார்த்துக் கொண்டிருந்தாலோ, தொழில் செய்து கொண்டிருந்தாலோ, அந்த நிறுவனத்தின் பெயருடன், நம் பெயரும் அச்சிடப்பட்டிருக்கும் விசிட்டிங் கார்ட் எனப்படும் அறிமுக அட்டையைக் கொடுப்போம்.
வேலை இன்னும் கிடைக்கவில்லை என்றால்… வேலைக்காகச் சந்திக்க வேண்டியவரிடம் நம்மைப் பற்றி ஏதாவது சொல்லலாம். அதைவிட, நம் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, விருப்பங்கள் போன்ற விவரங்களுடன் நம்மைப் பற்றிய கொஞ்சம் பெரிய அறிமுக அட்டையாக அளிக்க வேண்டியதைத்தான் தமிழில் ‘சுய விவரக் குறிப்பு’ என்ற பொருளில் ‘BIO DATA’ என்று பெயரிட்டு அழைத்துக்கொண்டிருந்தோம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, அதன் பொதுவான பெயர் பயோடேட்டாதான். பிறகு உலகளவிய அளவில், அதன் வடிவம் மாறி இப்போது RESUME, CV என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.


முந்தைய அத்தியாயத்தில் RESUME-க்கும் CV-க்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக நான் சந்திக்கும் கல்லூரி மாணவர்கள் இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று சொல்வார்கள். ஆனால், RESUME – CURRICULAM VITAE இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னாலே வேலை கிடைக்கும் என்றால் என்ன செய்வோம்? உண்மையிலேயே ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ரெஸ்யூமுக்கும் சிவிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டிருக்கிறார்கள். நம் ஆள் இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் கடவுளுக்குப் பல பெயர்கள் இருப்பது மாதிரி இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று வாதாடியிருக்கிறார். அப்புறம் என்ன ஆச்சு? என்ற உங்கள் கேள்விக்கு “இதுகூடத் தெரியாத உங்களுக்கு இங்கு வேலை தர இயலாது’ என்ற அவர்களது பதில்தான், பதில்!!
ரெஸ்யூமே என்பது ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் நறுக்குத்தெறித்த அறிமுகப் படிவம். இதில் உங்கள் சுய விவரம், கல்வித் தகுதி, திறமைகள் மற்றும் முன் அனுபவம் இருந்தால் அதனைப் பற்றிய ஒற்றை வரிச் செய்தி இவற்றுடன் நிறுத்திக்கொள்ளலாம்.
கரிக்குலம் விட்டே எனப்படும் CV என்பது, இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களை கொஞ்சம் விரிவாக, ஆற அமரப் படிக்கும் வகையில் அமைக்கும் அறிமுகப் படிவம். இதில் சுய விவரம். கல்வித் தகுதி. அந்தப் படிப்பில் செய்த ப்ராஜக்ட்கள் (செயல்முறைகள்), சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள், விளையாட்டில் வாங்கிய பரிசுகள், பொது நிகழ்வுகளில் பங்களிப்பு, NSS, NCC, RED CROSS, ரோட்டரி, லயன்ஸ் போன்ற சங்கங்களின் கல்வி நிறுவன அமைப்புகளில் வகித்த பதவிகள் ஆகிய அனைத்தும் இடம்பெறும்.
முதலில் நாம் ரெஸ்யூமை பற்றி விரிவாகப் பார்ப்போம். பொதுவாக முதலில் நிறுவனம் நம்மைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள விரும்பும்போது, ரெஸ்யூமைத்தான் கேட்பார்கள். ஏனெனில் இதனை முதலாம் நிலை வடிகட்டலுக்குப் பயன்படுத்தமுடியும்.
ஒரு நிறுவனத்தில் புதிய வேலைகளுக்கு 6 பேர் தேவைப்படுகிறார்கள் என்றால், முதலில் விண்ணப்பிக்கும் 250 நபர்களைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்வது கடினம் என்பதால், அவர்களது ரெஸ்யூமை பார்த்துத்தான் முதல்கட்ட முடிவு எடுப்பார்கள். அப்படியெனில், உண்மையிலேயே ஒரு வேலை தேடும் நபர், நிறுவனத்தின் மனத்துக்குள் நுழைய முதலில் வீச வேண்டிய அம்பு, ரெஸ்யூமேதான். அப்படியெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். பொதுவாக நாம் செய்வது என்னவென்றால், நண்பனுடைய ரெஸ்யூமை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, அதில் நம் தகவல்களை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே தேவையான நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துவிடுகிறோம்.
இதனை இப்படி ஒப்பிடலாம். ஒரு பெண்ணைக் காதலிக்க கடிதம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற சூழலில், ஏற்கெனவே ஒரு நண்பன் அதே பெண்ணுக்குக் கொடுத்த கடிதத்தை அப்படியே காப்பி அடித்து, அதில் பெயரை மட்டும் மாற்றிக்கொடுத்தால், அந்தப் பெண் நம்மைப் பற்றி என்ன நினைப்பாள்? (இந்தக் காலகட்டத்தில் அதனை இ-மெயில், SMS என்றுகூடக் கொள்ளலாம்) ஒரு பெண்ணுக்கு நண்பன் அனுப்பிய காதல் ப்ரோப்பஸல் SMS-ஐ அப்படியே பெயர் மாற்றி அவளுக்கே FORWARD செய்தால் எப்படிச் சொதப்புமோ… அதேபோல்தான் காப்பி அடித்து ரெஸ்யூமே அனுப்பினாலும் சொதப்பும்.
சொந்தமாகச் சிந்தித்து கொஞ்சம் கற்பனையும் கலந்து அனுப்பப்படும் ரெஸ்யூமேக்கள் நிறுவனங்களை வெகுவாகக் கவர்கின்றன. ஆனால், அது எந்த வேலை என்பதைப் பொறுத்து மாறுபடும். இங்கே சில கற்பனை மிகுந்த ரெஸ்யூமேகளை பார்க்கலாம்.
இதனையும் அப்படியே காப்பி அடித்துவிட வேண்டாம். உங்களைப்போலவே, நிறுவனத்தினரும் இந்த மாடல் ரெஸ்யூமேக்களை இணையத்தில் நிறையப் பார்த்திருப்பார்கள். அதனால், எச்சரிக்கையாக இருக்கவும்.
ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக, உண்மையிலேயே சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமிற்கு மதிப்பு அதிகம். அதனை பெயருக்குக் கீழ் எழுதும் OBJECTIVE என்ற விவரத்திலேயே நிறுவனம் கண்டுபிடித்துவிடும். பொதுவாக, அதில்தான் வேலை தேடும் அனைத்து நபர்களும் மாட்டுவார்கள். தன்னுடைய சுயசக்தியால், நேர்மையால், உழைப்பால், நிறுவனத்தையும் நிமிர்த்தி, தன்னையும் வளர்த்துக்கொள்வதுதான் நோக்கம் என்றபோக்கில் இருக்கும் அந்த வார்த்தைகள். இதெல்லாம் சினிமா வசனத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனால் யதார்த்தமாக எழுதப்படும் OBJECTIVE மீதுதான் நிறுவனம் அதிகக் கவனம் செலுத்தும்.
புதுப் பட்டதாரியாக இருந்தால், OBJECTIVE–ல் முதல் வேலையாக இருப்பதால், வேலை கற்றுக்கொண்டு, அதனை திறம்பட இங்கேயே செயல்படுத்திப் பார்க்க விரும்புகிறேன். வேலையில் என் திறமைகள் என்னவென்று கண்டுணர்ந்து, வளர்த்துக்கொள்ள என்னை இங்கு ஒப்படைக்க விரும்புகிறேன் என்ற ரீதியில் இருந்தால் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்.
ஏனெனில் HARD WORKING என்ற பதத்தை, முதலில் வேலை தேடுபவர்கள் பயன்படுத்தவே முடியாது. அவர்கள் படிப்பதற்காகச் செய்த கடின உழைப்பு வேறு. அதில் அவர்கள் பணம் செலவழித்து உழைத்தார்கள். ஆனால், வேலை என்று வரும்போது நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு உழைக்க வேண்டும். இதில் மனநிலையே மாறும். அதனை நிறுவனம் கண்டறிந்துகொள்ளும். கடினமாக உழைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாலே போதும்.
அடுத்த அத்தியாயத்தில் தொடர்வோம்...


நன்றி : http://goo.gl/XMv1gM
தனிப் பக்கத்தில் காண →